"என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"
"ஓம் நான் போடுறேல்லை."
"என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..!"
அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.
நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.
நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.
இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று யேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ..! என்றிருந்தது.
பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும் தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும் பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.
அவள் சற்று சங்கடத்துடன் "இவ யேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா" என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும் சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் "பஞ்சப் பிரதேசத்திலையிருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்" என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.
பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம். இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.
"ம்.... வைன் போலை இருக்கு" என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.
"ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.
"சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை"
அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.
நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ..!
"சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை" சமாளித்தேன்.
"இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம்." அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்.
´ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரீகமோ..?` நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.
சந்திரவதனா - 12.3.2003
Sunday, July 27, 2003
விடை கிடைக்காத கேள்விகள்
அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.
வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது.
மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.
றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.
சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.
எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று
மாமி..! என்ன காசு.. அது? ஏன்...? என்று கேட்டேன்.
அதற்கு மாமி
என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான். என்றா
ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?
அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம். - மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.
ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..? என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.
அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.
அந்தப் பணம் அவன் வியர்வை.
எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.
எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.
இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.
அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?
விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!
- சந்திரவதனா
1997
வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது.
மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.
றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.
சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.
எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று
மாமி..! என்ன காசு.. அது? ஏன்...? என்று கேட்டேன்.
அதற்கு மாமி
என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான். என்றா
ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?
அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம். - மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.
ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..? என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.
அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.
அந்தப் பணம் அவன் வியர்வை.
எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.
எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.
இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.
அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?
விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!
- சந்திரவதனா
1997