இந்த சுபா யாராக இருக்கும் என்று நான் பல தடவைகள் ஆராய்ச்சி செய்து விட்டேன். பலரையும் கேட்டுப் பார்த்து விட்டேன். பலன் என்னவோ பூச்சியம்தான். சுபாவைத் தெரிந்த யாரையுமே நான் இன்னும் சந்திக்கவில்லை.
சுபா ஆணா பெண்ணா என்ற ஆராய்ச்சியில் கூட நான் தோற்றுத்தான் போனேன். சுபா பெண்தான் என நான் எனக்குள்ளே தீர்மானித்து கண்டு பிடித்து விட்டேன் என்று இறுமாப்புடன் இருந்தால் சுபா அடுத்த வாரம் தனது சிறுகதையை ஒரு ஆணாக இருந்து எழுதியிருப்பார்.
ஈழமுரசில் வரும் சிறுகதைகளுக்குள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாகவும் அமைந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பது இவரின் கதைகள். கதையை நகர்த்தும் விதம் மிக நன்றாக இருக்கும்.
இவரைப் போல இன்னும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருக்கும் போது நான் ஏன் இவரைக் குறிப்பாகத் தேடினேன் என நீங்கள் யோசிக்கலாம். இவர் கதையிலே ஸ்ருட்கார்ட்டில் இருக்கும் பிருந்தா சில்க் கவுஸ் சொப்பிங் பாக் பற்றி வந்தது. அதுதான் என்னை அளவுக்கதிகமாக ஆர்வத்துடன் அவரைத் தேட வைத்தது. எனக்கு அண்மையில் இப்படி ஒரு எழுத்தாளர். சத்தமில்லாமல் தனது முழுப்பெயரைக் கூடக் குறிப்பிடாமல் சுபா என்று எழுதிக் கொண்டிருக்கிறார். இடையிடையே இவர் கதைகளில் ஸ்ருட்கார்ட்டில் வசிக்கும் தமிழ் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது படைப்புக்களின் பரம ரசிகை நான்.
ஆணா பெண்ணா என்று கூட அனுமானிக்க முடியாமல்...
என் மனத் தராசு பெண்தான் என்று ஊகம் கொண்டு அந்தப் பக்கம் தாழும் போது அவரது கதையை வாசித்த இன்னொருத்தி சொல்லுவாள் சீ.. அது ஆண். என்று. ஈழமுரசுக்குக் கூட எழுதிக் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் மூச்சுக் காட்டவில்லை.
இப்படியே சில வருடங்களாக மனதுக்குள் கேள்விக் குறியாக சுபாவைக் கொண்டு திரிகையில்தான் எனக்கு இந்த Blog இன் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரங்களில் ஒவ்வொருவரினதும் Blog ஆக திறந்து வாசித்துப் பார்த்த போதுதான் ஒரு Blog இனூடே சுபாஒன்லைன் அறிமுகமானது. அவரது பக்கங்களை வாசித்துக் கொண்டு போகும் போது அவர் யேர்மனியில் எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. உடனேயே எனக்குள் ஒரு சந்தோசம்.
இவர் அவராக இருப்பாரோ...? சந்தேகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதனால் உடனடியாக அவர் தளத்துக்குள் அவர் மின்னஞ்சல் முகவரியைத் தேடி எடுத்து, எனது தேடல் பற்றி மிகச் சுருக்கமாக எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் என்ன..? அனுப்பிய வேகத்தில் மின்னஞ்சல் என்னிடமே திரும்பி விட்டது.
இன்னும் தெரியவில்லை. யார் அந்த சுபா என்று..!