Saturday, October 04, 2003

மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற
சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி........

இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம்
அருமையான பாடற் காட்சி.

கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.

மீண்டும் கோகிலா படத்தில் இந்த ஜோடிகள் இணைந்தது மட்டுமல்லாமல் பெண் பார்க்கும் படலமும் சற்று வித்தியாசமாக சந்தோசமான முறையில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும்.
உண்மையில் எப்படியோ.....? இந்தியத் திரைப் படங்களில் அப்படித்தான் காட்டுகிறார்கள்.

பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும்.
வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு
பெண் கூனா, குருடா, செவிடா...... என்று ஆராய, அவளை ஆடு.. பாடு.. என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வது அபத்தமாகப் பெண்ணை அவமதிப்பது போலாக இருக்கும்.

இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது.
ஆனால் கமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதம் அருமையாக உள்ளது. அழகாக உள்ளது.

மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது
இந்தச் - சின்னஞ் சிறு வயதினிலே....... என்ற பாடலைத்தான் பாடுகிறார்.
பாடல் தொடங்கும் போதே ஜானகியின் இனிய குரல் அற்புதமாக எம்மைத் தழுவுகிறது. அந்த இனிமையை நாம் ரசிக்க, படத்தில் மாப்பிள்ளையாக வந்த கமலும் அதை ரசிக்கத் தொடங்கி விடுவது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது. செயற்கைத் தன்மை இல்லாமல் பெற்றோருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இராமல் பெண்ணை மதிப்பதாகக் காட்டி பார்ப்பவர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு - இடையில் - பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமல் தொடர்ந்து பாடுவதாய் காட்சி அமைகிறது.

கமல் பாடத் தொடங்கியதும் சிறீதேவி தனக்குள் தோன்றிய ஆச்சரியத்தையும் பரவசத்தையும் காட்டும் விதம் - அந்த முகபாவம் - அற்புதமாய் அமைந்துள்ளது. சிறீதேவியின் நடிப்புத்திறன் அழகாய் வெளி வருகிறது.

தொடரும் பாடலில்
பாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை - இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை - தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை... இன்னும் வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை... என்று நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனக் காட்டப் பட்டது இனிமையான ஆச்சரியத்தைத் தருகிறது.

காதல் நெருப்பினிலே என் கண்களை விட்டு விட்டேன்....
மோதும் விரகத்திலே..... என்ற கட்டத்தில் குழந்தையொன்று கமலின் மடியை நனைத்து விடும். அது கூட சுவாரஸ்யமாக உள்ளது.

மொத்தத்தில் சாதரணமாக நடக்கக் கூடிய விடயங்கள் பாடலுடன் இணைக்கப் பட்டு, கமலும் சிறீதேவியும் அருமையாக நடித்து, அருமையான இசையுடன் யேசுதாஸ் ஜானகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதில் இனிமையைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு இனிய பாடலாக அமைந்துள்ளது.

சந்திரவதனா - யேர்மனி - 24.1.01