Wednesday, March 17, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -1

எம் வாழ்வில் நடந்து முடிந்து போன சில விடயங்களோ அல்லது நாம் சந்தித்த சில விடயங்களோ அடிக்கடி எமது நினைவுகளுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும். அவை சந்தோசமான விடயங்களாக எம்மைக் குதூகலிக்க வைப்பதாகவோ அல்லது மிகத் துயரமான விடயங்களாக எம்மைப் மிகவும் பாதிப்பதாகவோ இருக்கலாம்.

இழப்புகள் எல்லோருக்கும் வருவதுதான். இதில் மனித இழப்புக்கள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் மிகவும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.


இதில் நினைவு தெரிந்து நான் முதல் முதல் சந்தித்த மரணம் எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்தது. நேற்றும் அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து அது எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்ததுதான் என்பதைத் திடப் படுத்திக் கொண்டேன். எனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிச் சில தினங்களின் பின் அதாவது 1962 டிசம்பரில் நடந்தததாம்.

பிறேமா மாமியை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் வீட்டையும் அவர்கள் வீட்டையும் ஒரு செம்பருத்தி வேலிதான் பிரித்தது. அம்மாவின் தாய் மாமன் மகள். மச்சாள் என்ற உறவையும் விட அவர்களுக்குள் நட்புத்தான் பலமாக இருந்ததாம். அம்மாவை விட வயதில் குறைந்தவர். அப்போதுதான் அவவுக்குத் திருமணமாகிக் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை எனக்கு ஞாபகமில்லை.

திடீரென அந்த வீடு அன்று ஒப்பாரிக் கோலம் கொண்டது. எல்லோருமே அழுதார்கள். பிறேமா மாமியும் கணவனும் குழுந்தையுடன் இலங்கையின் தென்பகுதிக்குப் பயணமாகிக் கொண்டிருக்கையில் காரின் பின் பக்கக் கதவு திறபட்டு அவவும் குழந்தையும் வழியிலே வீழ்ந்து விட்டார்களாம். அதை உடனே சாரதியோ முன் இருக்கையில் இருந்த அவர் கணவனோ கவனிக்க வில்லையாம். நீண்ட தூரம் போன பின்தான் ஏதோ பிசகி விட்டதை உணர்ந்து வந்த வழி திரும்பிய போது மாமியும் குழந்தையும் வீதியோரத்தில் தூக்கி எறியப் பட்டு இறந்து போயிருந்தார்களாம்.

மூன்று ஆண் பிள்ளைகளுக்கு ஒரு அக்காவாக ஒற்றைப் பெண்ணாக இருந்த அவவின் இழப்பு அந்தக் குடும்பத்தை எவ்வளவு பாதித்தது என்பதை வருடங்கள் வருடங்களாக நான் உணர்ந்தேன். ஆனால் அன்று அந்த இழப்பு என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. எனது அம்மாவும் அழுதா என்பதால் சாவின் கனமோ துயரோ தெரியாத அந்த வயதில் அம்மாவும் அழுகிறா என்பதால் எனக்கும் அழுகை வர நானும் ஒப்பாரி செய்பவர் கூட்டத்தின் அருகில் உள்ள கப்பைக் கட்டிப் பிடித்த படி அழுது கொண்டு நின்றேன்.

நேரம் காலம் எதுவுமே பார்க்காமல் மனசுக்குள் அடிக்கடி வலம் வரும் பல நினைவுகளில் இதுவும் ஒன்று.

(தொடரும்)