Thursday, May 20, 2004

பயம்

பயம் இது கூட காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப மாறி விடும் என்பதை வான்கெல்சிங் பார்த்த பின்தான் உணர்ந்தேன்.

வான்கெல்சிங் பார்க்கப் போனாயா? உனக்கு வேறை வேலை இல்லையா..?
இப்பிடித்தான் எனது வேலையிடத்துத் தோழி கேட்டாள்.
உண்மையைச் சொன்னால் வான்கெல்சிங்கை விட ஒரு சலங்கை ஒலியோ, அல்லது ஒரு தில்லானா மோகனாம்பாளோ.. அல்லது ஒரு பாரதியோ பார்த்திருந்தால் அவை எனது ரசனைக்குப் பெரிய விருந்தாகியிருந்திருக்கும்.

அதற்காக வான்கெல்சிங் எல்லாம் பார்க்கக் கூடாதென்றில்லைத்தானே!
ஊரில் இருந்த போது சின்ன வயதில் எனது அண்ணன் முதல் முதலாக றெகுலா படம் பார்த்து விட்டு வந்து கண்களை உருட்டி உருட்டிக் கதை சொன்ன போது வந்த பயம் இந்தப் படத்தைப் பார்த்த போது வரவில்லைத்தான்.

அண்ணன் அவன் கதை சொல்வதில் விண்ணன். அவன் படக்கதை சொன்னால் சிலகாலம் கழித்து அந்தப் படத்தை நான் பார்த்தேனா அல்லது அண்ணன் கதை சொன்னானா என்று தடுமாறுமளவுக்கு காட்சியை மனதில் பதித்து விடுவான். அப்படித்தான் ரெகுலா படங்கள் இரண்டை எனக்குள் பதித்திருந்தான். எப்படி ரெகுலா இரத்தம் குடிக்கும் என்பதைக் கூட சொல்லித் தந்திருந்தான். சின்ன வயதில் அது பல தடவைகள் என்னை இரவுகளில் பின் வளவில் இருந்து குடல் தெறிக்க ஓட வைத்திருக்கிறது.

அப்படியான பயங்கரமான படங்களை நானே பார்ப்பதற்கான வாய்ப்புகள் என்னவோ யேர்மனிக்கு வந்த பின்தான் எனக்குக் கிடைத்தன. எனது கணவரோடு எனது வீட்டிலிருந்து (தொலைக்காட்சியில்) பார்த்ததாலோ என்னவோ அப்படங்கள் கூட என்னை அவ்வளவாகப் பயமுறுத்தவில்லை.

ஆனாலும் ஒரு தரம் ஒரு படத்தில் குளியல் அறை பேசினுக்குள் தண்ணீர் துளித்துளியாய் சிந்தும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு இரவின் கதை அது. ஒரு வீட்டில் வாழும் குடும்பத்தை விடை கண்டு பிடிக்க முடியாத ஒரு தொந்தரவாய் ஒரு இரவு முழுக்க பேய்கள் தொந்தரவு செய்வதும் குருதி சிந்தியிருப்பதும் எனறமைந்த படம். அந்தச் சத்தம் அதாவது துளித்துளியாய் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அந்தக் குளியலறை பேசினுக்குள் ஒரு வயதான பெண்ணின் சடலம் இருக்கும்.

அப்படத்தைப் பார்த்த பின் சில காலங்களாக எனது வீட்டில் சமையலறையில் பைப் சரியாகப் பூட்டப் படாது தண்ணீர் சிந்தினால் அப்போது எழும் சத்தம் எனக்கு அந்தப் படத்தில் இறந்து கிடந்த பெண்ணை ஞாபகப் படுத்தி ஒரு வித அசௌகரியத்தையே ஏற்படுத்தியது. அதனால் ஓடிப்போய் பைப்பை நிற்பாட்டி விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன்.

ஆனாலும் பெரிதான பயங்கள் என்பது சின்ன வயதில் போல் தாக்கியது குறைவுதான். இதற்கான காரணம் எமது நாட்டுப் பிரச்சனைகளும் அதனாலான பாரிய உயிர் இழப்புகளுமாகக் கூட இருக்கலாமோ என நான் நினைப்பதுண்டு.

19.5.2004