Friday, June 04, 2004
வலைவலம் - 04-06-04
ஈழநாதனின் கிறுக்கல்களில் பதியப்பட்ட ஈன்ற பொழுதில்.... கவிதையை வாசித்த போது என்னையறியாமலே கண்கள் பனித்து விட்டது.
மனம் எங்கோ சென்று விட்டது. இந்த சோகம் ஈழத்தில் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டது. எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல.
1987-1988-1989 காலப் பகுதிகளில் தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடிக் கொண்டிருந்தது.
தம்பியைப் பிடிக்க முடியாத நிலையில்...
எரிச்சல் வரும் போதெல்லாம் இந்திய இராணுவம் கும்பலாய் எங்கள் வீட்டுக்கு வந்து
எனது பெற்றோரை சகோதரரை என்று கொடுமைப் படுத்திக் கொண்டே இருந்தது.
தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் புலம் பெயர்ந்து விட்டார்கள்.
அப்போது எனது அப்பா யாழ் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்ததால் அவருக்கென கொடுக்கப் பட்ட யாழ் புகையிரதநிலைய தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த குவார்ட்டர்ஸ்சிலேயே இவர்களும் தங்கி விட்டார்கள்.
ஆனால் ஸ்ரான்லி ரோட்டில் இருந்த இந்த வீட்டின் பின்புறமாக ரெயில்வே குவார்டர்ஸ்சோடு சேர்ந்தே இந்திய இராணுவம் தமது முகாமை அமைத்திருந்தது. இடையில் எட்டிப் பார்க்கக் கூடிய அளவில் ஒரு வேலிதான். எந்த நேரமும் அவர்கள் எமது வீட்டுக்குள் நுழையக் கூடிய வகையில் பின் படலை திறந்தே இருக்க வேண்டும். இது அவர்கள் எனது குடும்பத்துக்கு இட்ட கட்டளை.
அப்பா அவர்களுக்கு பச்சைப் பொய் சொல்லி வைத்திருந்தார். தனக்கு ஒரேயொரு ஆண்பிள்ளைதான் என்றும். அவரும் சவுதியில் என்றும். அவர்களுக்கு புகையிரத நிலைய தலைமை அதிபரான அப்பாவில் நல்ல நம்பிக்கையும் மதிப்பும். அதனால் அப்பாவின் அவசரகால அவசியப் பொய்யை நம்பி விட்டார்கள்.
உள்ளுக்குள் பயத்தைச் சுமந்து கொண்டு வெளிக்கு அவர்களோடு நட்பாகப் பழகிய எமது குடும்பத்துக்கும் அந்த நாள் வந்தது.
தம்பி மொறிஸ் 1.5.1989 அன்று வீரமரணம் எய்தி விட்டான். செய்தியை உறவினர் வல்லைவெளியினூடாகக் கொண்டு வந்திருந்தனர்.
அந்தப் பொழுதில் ஊர்கூட்டி அழவோ, மார்தட்டிப் புலம்பவோ, மனம் ஆறும் படி கதறவோ முடியாது சோகத்தை நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு எனது அம்மாவும் அப்பாவும் சகோதரிகளும் பட்ட வேதனைகள் கொஞ்சமல்ல. இதை எனது சகோதரி சந்திரா ரவீந்திரன் "முறியாதபனை" என்ற தலைப்பில் ஒரு கதைபோல எழுதினார். பத்மனாபஐயரின் யுகம்மாறும் தொகுப்பில் இடம் பெற்றது.
இத் துயரச் சம்பவத்தின் போது நான் அவர்கள் அருகில் இருக்க முடியாத படி யேர்மனியில் இருந்தேன். இப்போது போல தொலைபேசவோ, உடனுக்குடன் கடிதங்களை அனுப்பவோ, மின்னஞ்சல் எழுதவோ முடியாத வதையான காலமது.
ஈழநாதனின் இன்றைய ஈன்ற பொழுதில்.... கவிதை என்னை மீண்டும் ஒரு தரம் உலுக்கி விட்டிருக்கிறது.
வலைவலம் - 04-06-04
நான்கைந்து நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன். என்று அப்பாவியாய் கேட்டிருந்தார் பார்வை - சுரேன் நடேசன்.
இன்று போய்ப் பார்த்தால் பலவிதமான விடயங்களை எம்மோடு பகிர்ந்துள்ளார்.
இயல்பிலேயே மற்றவர்களின் ஆக்கங்களை எல்லாம் அலுக்காது சலிக்காது வாசித்து, அதை மற்றவரோடும் பகிர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர் சுரேன்.
இவர் நிட்சயமாக எமக்கெட்டாத விடயங்களையெல்லாம் இங்கு பதிந்து எம்மைத் தன் வலைப்பதிவின்பால் ஈர்ப்பார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.