Monday, July 12, 2004

புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள்


புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா
என்பது பற்றியதான கருத்தாடலொன்று யாழ்கருத்துக்களத்தில் என் கவனத்தை ஈர்த்தது.

அனேகமான தமிழர்கள், தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுகிறார்கள். ஏன்..? கேள்விக்குறிதான்.

யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் காரணங்கள் புரிகின்றன.

புலம் பெயர்ந்த பின் தனிமை என்ற ஒன்றைக் கண்டு வெகுண்டு...
எங்காவது ஒரு தமிழ் முகத்தைக் கண்டாலே மகிழ்நது...
தமிழ்க் குரலுக்காக ஏங்கி....
தமிழ் எழுத்துக்களையே காணாது வாடி....
இன்று தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுமளவுக்கு வந்து விட்டுதே.

ஏன்...?

புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா எனக் கேட்கும் போது எடுத்த உடனே தமிழர்கள் இருப்பது நல்லதில்லை என்று சொன்னால் அது ஏதோ நாம் தமிழரை வெறுக்கிறோம் என்ற காட்சிப் பிரமையையே ஏற்படுத்தும். ஊரிலே தமிழர்களுடன் வாழவில்லையா என்ற கேள்வி எழும்.

வாழ்ந்தோம்தான்.
அப்படி வாழ்ந்த நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும்...
தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். எம்மோடு ஒத்து... அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு.. எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும்.

இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.

ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியில்லையே.
சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாக இருக்கிறார்கள். நட்பென்று சொல்லிக் கரம் நீட்டி விட்டு தருணம் பார்த்து முறித்தெறிய முனைகிறார்கள். அவர்களது சுயரூபமோ, குணாதிசயமோ எடுத்த எடுப்பிலேயே எங்களுக்குத் தெரிந்து விடுவதில்லை. சிலரின் அநாகரீகமான பழக்க வழக்கங்களுடன் ஒன்ற முடிவதில்லை.

தனிமை, அந்நியச் சூழ்நிலை... என்ற ஒரு அந்தர நிலையில் தமிழர் என்று கண்ட உடனே மகிழ்ச்சியில் திளைத்து... அவர்கள் பற்றி எதுவுமே தெரியாமலே, நண்பர்களாக மதித்து வீடுகளுக்குள் அனுமதிக்கிறோம். அது மட்டுமா..? இதயத்தையே திறந்து பேசுகிறோம். காலப்போக்கிலோ அன்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ... நண்பர்கள் என்று நம்பியவர்களின் ஏமாற்றுச் செயல்களால் ஏமாந்து போகிறோம்.

இது இன்று நேற்றல்ல. பலகாலமாக புலத்தில் தொடர்கிறது. இது போன்றதான சில சம்பவங்கள்.. நடைமுறைகள்.. போன்றவற்றின் பிரதிபலிப்புத்தான்
"தமிழர்களோ...! அங்கே வேண்டாம்." என்ற குரல்கள்.

அது மட்டுமன்றி ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது வீட்டுப் பிரச்சனைகளை விடுத்து, அடுத்த வீட்டுப் பிரச்சனைக்குள் தலை போடுவதில்லை. ஆனால் எமது தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டு பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டு, அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றதென்று பார்த்து, அதற்கு கை, கால், மூக்கு, வாய்... என்று வைத்து இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி ஊருக்குப் பறை சாற்றுவதில் இன்பம் காண்பார்கள்.

இதெல்லாம், தாம் உண்டு. தம் வேலை உண்டு என்று வாழும் தமிழருக்கு தலையிடி கொடுக்கும் விடயங்களே. இப்படியான பல பிரச்சனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காகத்தான் பல தமிழர் எந்தச் சோலியும் வேண்டாம். பேசாமல் ஒரு மூலையில் இருப்போம் என்று நினைத்து, தமிழர்கள் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களை நாட்டுப்பற்றல்லாதவர்களென்றோ, தமிழ்பண்பாடு இல்லாதவர்கள் என்றோ நினைத்து விடாதீர்கள். கூடி இருந்து குழப்பம் விளைவிப்பவர்களை விட, தனித்திருந்து அமைதியாக வாழ விரும்பும் இவர்களிடம் அனேகமாக நல்ல பண்புகளே இருக்கும்.

அதே நேரம், சிலர் இளைஞர்களினாலான பிரச்சனைகளே தமிழர்கள் தனித்து வாழ விரும்புவதற்கான காரணம் எனக் கருதுகிறார்கள். அதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. சில இடங்களில் இளைஞர்களின் வரம்பு மீறல் சற்று அதீதம்தான். அதையும் விட மேலான பல பிரச்சனைகள் பெரியவர்களாலேயே ஏற்படுகின்றன.