Friday, July 16, 2004

மூக்குத்தி


நிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை. ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன்.

உண்மையில் என்ன?
ஆதிகாலத்தில் இவையெல்லாம் காரணத்தோடுதான் செய்யப் பட்டன. இடையிலே எப்படியோ அடிமைச் சின்னங்களாகி விட்டன.

உதாரணமாக,
 பூக்களுக்கு பஞ்சினைப் போல ஈரத்தை உறிஞ்சும் இயற்கையான தன்மை உண்டு. அதனால் Hair drier இல்லாத அந்தக் காலத்தில் கூந்தலில் நிறையப் பூக்களைச் சூடி தலையைக் காய வைத்தனர். ஆனால் கணவனை இழந்த பின் தலை ஈரத்தோடே இருக்கலாம் என்பது போல, கணவனை இழந்த பெண்கள் பூச்சூட மறுக்கப் பட்டது எப்போது வந்தது? ஏன் வந்தது என்பது கேள்விக்குறியே.  
 
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.   
 உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 
 
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது. 
 
இத்தனை நன்மைகள் இருந்தும் நான் மூக்குக் குத்தவில்லை.
மூக்கைக் குத்தும் போது வலிக்கும் அல்லவா!