Monday, August 02, 2004

வலைவலம் - 2.8.2004


வாலிப வயதும் பாலியலும்


பிள்ளைகள் ரீன்ஏஜ்ஜைத் தொட்டு விட்டாலே போதும்.
பருவவயதுக்கேயுரிய தவறுகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பற்றலாம் என்று பெற்றொர்களின் மனதில் தோன்றும் பெருங்கவலையில் - பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதித்து சும்மா இருக்கும் பிள்ளைகளிடம் கூட
விசனத்தை ஏற்படுத்துமளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.

நான் இப்ப அவனை வெளியிலையே விடுறதில்லை. தெரியும்தானே... யேர்மன் பெடியள் எப்பிடியெண்டு. அதுகளோடை சேர்ந்து இவனும் சிகரெட் குடிக்கப் பழகினால் என்ன செய்யிறது.?"
12 வயது மகனை பாடசாலை தவிர வேறெங்கும் செல்ல அனுமதியாது.. விளையாடக் கூட விடாது தடுத்து வைத்திருக்கும் ஒரு தாய் இவர். இந்தக் கட்டுப்பாடு இந்த 12 வயதுப் பையனை எந்தளவுக்கு மனமுடைய வைத்து குரோதமான பிழைகளைச் செய்ய வைக்குமென அந்தப் பெண்ணுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

"எனக்குப் பாருங்கோ. இப்ப எல்லாம் காலைமை எழும்பினால் வீட்டிலை ஒரே சண்டைதான். இவன் என்னடா எண்டால் தலைக்கு Gel பூசுறான். ரவுசரை தொழதொழா எண்டு போடுறான். பார்க்கச் சகிக்கேல்லை. இந்த ரவுசராலேயே எனக்கும் அவனுக்கும் சதா சண்டை. தலையிடி தாங்க முடியேல்லை."
இது பாடசாலையில் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்கும் 20 வயது மகனின் தாயார். ஊரிலே தலைக்கு எண்ணெய் பூசித் தலையைப் படிய வைக்கவில்லையா?
பெல்பொட்டம் வந்த காலத்தில் எம்மவர்கள் எல்லாம் பெல்பொட்டம் போடவில்லையா.
அது போலத்தான் இதுவும் ஒரு ஸ்ரைல். இது விடயங்களில் அளவுக்கதிகமான கட்டுப்பாடு அவசியம் இல்லை என்பதை அவளுக்குப் புரிய வைப்பது கஸ்டமாகத்தான் இருக்கிறது.

இதே போலத்தான் பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள், கேள்விகள், விளக்கங்களிலும் அனேகமான பெற்றோர் புரிந்துணர்வின்றி பிள்ளைகளுடன் நடந்து கொள்கிறார்கள்.

எடுத்ததற்கெல்லாம் அடி.. பிடி.. என்று அதிகாரமாக நடந்து கொண்டால் பிள்ளைகள் மனதில் ஒரு வெறுப்புணர்வே தோன்றும். இதைப் பெற்றோர்கள் கருத்தில் கொண்டு பிள்ளைகளுடன் ஆற அமர இருந்து நட்போடு பேச வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் மேல் இது சம்பந்தமாகப் பேசுதற்குரிய நம்பிக்கை பிறக்கும்.

இது வியடமாக இர.அருள் குமரன் சொல்கிறார்
பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை
இர.அருள் குமரன் இது விடயமாக இன்னும் பலவற்றை வாலிப வயதும் பாலியலும் என்ற தலைப்பில் தனது பதிவில் விளக்கமாகவும் அழகாகவும் பதித்துள்ளார். பெற்றோர்கள் கண்டிப்பாக வாசித்துப் பயன் பெறுங்கள்.