Thursday, October 14, 2004
என்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்
அம்மா எங்களை கொஞ்ச நேரத்துக்குக் குழப்பக் கூடாது." இப்படி நாங்கள் சொன்னோமென்றால் வானலையில் எதனோடோ ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்குத் தெரியும்.
ஓய்வு ஒழிச்சலின்றி எங்கள் வீட்டு வானொலி எட்டு வீடு எடுபடக் கத்திக் கொண்டே இருந்தாலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு நாங்கள் வானொலியின் அருகிலேயே அமர்ந்து விடுவோம். அவைகளில் திரு.அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்து வழங்கும் பாட்டுக்குப் பாட்டு, ஒரு நிமிடம், ஆம் இல்லை, தேனிசை மழை, ஏழு கேள்விகள்.. போன்ற நிகழ்ச்சிகளும் இவைகளோடு இசைக்கோலம் மீனவநண்பன்........... போன்ற தொடர்களும் முக்கிய இடத்தை வகித்தன.
அப்போதெல்லாம் பெரும்பாலான சனி ஞாயிறுகளில் நாங்கள் வானொலியை விட்டு அகலுவதேயில்லை. வானொலிக்குள் புகுந்து விடாத குறை மட்டுந்தான். மற்றும் படி வானொலியே தவம் என்று கிடப்போம். அம்மாவுக்கு நாங்கள் சொல்லும், கொஞ்ச நேரத்துக்கான அர்த்தமே அன்று வேறாக இருக்கும்.
அப்துல் ஹமீத் அவர்களின் நிகழ்ச்சிகளுடன்தான் நாங்கள் ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்கும் தெரியுமென்பதால் அம்மாவும் நிகழ்ச்சிகள் முடியும் வரை எங்களைக் குழப்புவதில்லை.
சில அறிவிப்பாளர்களிடம் நேயர்களைக் கவரும் பிரத்தியேகத் தன்மை உண்டு. அந்த வரிசையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா அவர்களும், அப்துல் ஹமீத் அவர்களும் குறிப்பிடத்தக்க தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்கள்.
நாங்கள் காலம் நேரம் பாராது இவர்களின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடாது கேட்போம். அதனாலோ என்னவோ அந்தக் காலத்தில் இன்னும் முன்னோங்கி நின்ற அப்துல்ஹமீத் அவர்களும், அவரது குரலும் எம்மோடு மிகவும் ஐக்கியமாகி விட்டிருந்தன.
1981 இல் நான் கொழும்புக்குப் போயிருந்த சமயம் அப்துல்ஹமீத் அவர்களின் பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியொன்று சரஸ்வதி மண்டபத்தில் நடப்பதறிந்து அதை நேரே பார்க்கும் ஆவலில் சரஸ்வதி மண்டபத்துக்குச் சென்றிருந்தேன். மிகவும் லாவகமாக அப்துல் ஹமீத் அவர்கள் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.
நூற்றுக்கணக்கான அவரது அபிமான ரசிகர்களின் மத்தியில் அமர்ந்திருந்த என்னை அவர் அறிந்திருக்க மாட்டார். ஆனால் நான் அவரது லாவகமான, அழகிய அறிவிப்பில் லயித்திருந்தேன்.
நிகழ்ச்சி முடியும் தறுவாயில்தான் எதிர் பாராத ஒரு விடயத்தை அறிவித்தார்கள்.
அது ரம்ளான் நேரம். அப்துல் ஹமீத் அவர்கள் அன்று நோன்பில் இருந்தார்.
கேட்டதுமே மனதுக்கு மிகவும் கஸ்டமாகப் போய் விட்டது. நோன்பின் போது எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது என்பது இஸ்லாம் விதிமுறை. அப்படியிருக்க நிகழ்ச்சி நன்றாக நடைபெற வேண்டுமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன் கஸ்டத்தையும் பொருட்படுத்தாது, பார்வையாளருக்கும் தன் களைப்பையோ, இயலாமையையோ தெரிய விடாது அத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார். அவரது அந்த - எடுத்துக் கொண்ட விடயத்தைத் தன்னதாக நினைத்து செவ்வனே நடாத்தி முடிக்கும் - தன்மை நிறைந்த, கலையோடு கூடிய கடமையுணர்வு என்னை வியக்க வைத்தது. அதன் பின் அப்துல் ஹமீத் அவர்கள் எனக்குள்ளே இன்னும் சற்று உயர்ந்திருந்தார்.
புலம் பெயர்ந்த பின் நீண்ட காலங்களாக அவரின் குரலைக் கேட்கவோ அவரது அழகிய லாவகமான அறிவிப்பில் லயிக்கவோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் 26.9.1999 அன்று அவர் ஐபிசிக்கு வருகை தந்து சுமதி சுரேசனும், கணேஸ் தேவராஜாவும் இணைந்து தயாரித்து வழங்கிய காபை;பரிதி நிகழ்ச்சியினூடு குரல் தரிசனம் தந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதை விட ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஈழத்துப் பாடல்களில் இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுதியும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் - இசையின் மழையில் நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும்... என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ், இரட்ணம் இருவரும் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.
பாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு.. என்று எல்லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.
இது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இறைதாசன் என்ற கவிஞர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் எனது அபிமான அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.ராஜென் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போது இப்படியொரு திறமையும் அவரிடம் உண்டா என நினைந்து உண்மையிலேயே நான் வியந்து போனேன்.
சந்திரவதனா
யேர்மனி
22.7.2004
பிரசுரம் - கலையமுதம் (31.7.2004)
(அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழா மலர்)