Monday, October 18, 2004

பெண்ணே...!


பழைய கவிதைகளில் இன்னுமொன்று

உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.
கலாச்சாரம் பண்பாடு என்ற
கட்டுத்தளைகளிடம்
நீயே உன் மனசை அடகு வைத்து
இல்லையில்லை
உனது அம்மா
அம்மம்மா
ஆச்சி......
அவர்களைப் போலவே
நீயும்..
விட்டு விலகவோ
தப்பி ஓடவோ
வழி தெரியாது
உன்னை அண்டியுள்ள எல்லோராலும்
இறுகப் பிணைக்கப் பட்டு
மனசு நெரிக்கப் பட்டு...
இறுகப் பற்றியிருக்கும்
சமூகச் சங்கிலியை
உடைத்தெறியத் தெரியாமல்
மனசில்
வலியும் உளைவுமாய்..
பெண்ணே...!
உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.

-6.9.2002-

இலவு காத்த கிளியாக....!


(பழைய கவிதையொன்று)

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999