Thursday, October 21, 2004

குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர்

எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.

இலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து "எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.

என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.
அந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

அப்படியிருக்க...?

உண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ? இதற்கென்றே சிலரோ..?

சந்திரவதனா
யேர்மனி
21.10.2004