Sunday, November 07, 2004

எப்படி..? எல்லாமே ரொஜான் வைரஸ்கள்.

இரண்டு நாட்களாக கணினியோடு மல்யுத்தம் நடத்துவது போன்றதான உணர்வு. கணினிக்குள் நுழையவே முடியாமல் இருப்பதும், பலதர முயற்சியின் பின் அப்பாடா என்று நுழையும் போது, கணினி அப்படியே ஸ்தம்பித்து விடுவதும் என்று பாடாய்ப் படுத்தி விட்டது. மிக நல்ல பாதுகாப்பான வைரஸ் தடுப்பை நான் வைத்திருந்த போதும் எப்படி..? எல்லாம் உட் புகுந்தன. எல்லாமே ரொஜான் வைரஸ்கள். ஒருவாறு அழித்து விட்டேன் என்ற திருப்தியோடு நிமிரும் போது விண்டோஸ் செயலிழந்து விட்டது என்ற எச்சரிக்கை. எழுதிக் கொண்டிருக்கும் போது கணனியின் ஸ்தம்பிதம் எழுதியதையே தொலைக்கும் படி ஆக்கி விட்டது. இப்படியே நேற்றைய பொழுது எந்தவிதப் பயனுமின்றிக் கரைந்து போய் விட்டது. 5ந்திகதிக்குள் எழுதித் தருகிறேன் என்ற என் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. பல மின்னஞ்சல்களுக்கான பதில்கள் எழுதிக் கொண்டிருக்கும் போதே இடை நடுவில் நிறுத்தப் பட்டு விட்டன.

இந்த நிலையிலும் தமிழ்மணத்துக்கு வந்த போது என்றென்றும் அன்புடன் பாலாவின் பல்லவியும் சரணமும் என்னைத் தன்பால் ஈர்த்தன. அதற்குப் பதில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டென்பதால், இடை நடுவே நிறுத்த நிறுத்த மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்தேன். ஒருவாறு ஓரளவுக்காவது பதில்களை எழுதி அனுப்பிய போது அங்கு எந்தப் பதிலையுமே பார்க்க முடியவில்லை. 5comments இருப்பதாகக் காட்டுகிறதே தவிர அவைகளைப் பார்க்க முடியவில்லை.