Wednesday, November 10, 2004

அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்.

"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..! எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.. "

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல. "

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்?"

"உலகமே பார்க்கக் கூடியதா இப்பிடிச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..? "

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு. உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே. வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். "

"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்."