Friday, March 18, 2005

நகைச்சுவை உணர்வே முதன்மையானது


இவ்வாரம் என்னை வந்தடைந்த பத்திரிகை வடலி. மார்ச் மாத ஓலை வந்துள்ளது. எப்போதும் போலவே நல்ல கட்டுரைகள் நிறைந்துள்ளன. இம்முறை ஒரு சிறுகதையும் இடம் பிடித்துள்ளது.

வலைப்பூக்களில் எங்களுக்கு அறிமுகமான ஷண்முகியின் உணர்வுகள் நிஜங்களாக சிறுகதை இடம் பெற்றுள்ளது. வேற்று மொழியைப் படித்து நல்ல புள்ளிகளையும் பெற்றுக் கொள்ளும் எமது குழந்தைகள் தாய்மொழியான தமிழைக் கற்காமல் இருப்பது புலத்தில் நடந்துள்ளது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அது எத்தகையதொரு அடையாளமிழப்பு என்பதை விளக்கிய சிறுகதை அது.

உணவுக்குச்சாயம் உடலுக்குக் கெடுதியா என்ற சி.மாசிலாமணி தந்த தகவல் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெழுகு, பெற்றோல், நிலப்பொலிஸ் போன்றவற்றிற்கு நிறமூட்டப் பயன் படுதப்படும் சுடான்1 என்ற சிவப்புச்சாயம் எமது தூளிலும் கலந்திருந்தது 2003இல் கண்டு பிடிக்கப் பட்டு அத்தூளுக்கு தடை விதிக்கப் பட்டதாம். இது எனக்கு புதிய செய்திதான். ஆனால் சில வாரங்களுக்கு முன் நான் வாங்கிய ஒரு தூள் ஓரு வித்தியாசமான சிவப்பாக இருந்தது. ஏற்கெனவே அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இப்போது இந்தத் தகவல் சந்தேகத்துக்கு சற்று வலுச் சேர்த்துள்ளது.

அதீத எதிர்பார்ப்பு ஆபத்தைத் தரலாம் என்ற தலைப்பில் பிள்ளைகள் இப்படித்தான்... இந்தத்துறையில்தான்... வரவேண்டும் என நாம் எதிர்பார்க்காமல் எந்தத் துறை அவர்களுக்குப் பொருத்தம் என அறிந்து, அந்தப் பாதைக்கு நாம் வழிவகுத்துக் கொடுக்க வேண்டுமென்ற நல்லதொரு கருத்துத் தொனிக்கும் கட்டுரையை நகுலா சிவநாதன் தந்துள்ளார்.

விலங்குகள் கூறும் கவிதைகள் பகுதியில் வழமை போலவே அழகாக இம்முறை மயில் சொன்னது கவிதையை செல்லத்தம்பி சிறீஸ்கந்தராசா அவர்கள் தந்துள்ளார். ஆனால் இம்முறையோடு அந்தக் கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் தரப் போகிறாராம்.

இதைவிட இன்னும் வைத்தியகலாநிதி ஆ.விசாகரத்தினம் அவர்களின் அறிவும் உணர்வும் ஆய்வு, டொக்கர் என்.எஸ்.மூர்த்தி அவர்களின் நலமுடன் வாழ்வோம் போன்ற பல விடயங்கள் பத்திரிகைக்குள் அடங்கியுள்ளன.

பிறந்தநாளுக்கு மெழுகுதிரியைக் கொழுத்தி அணைத்து விட்டுக் கொண்டாடுவது முறையா..? இனி அப்படிச் செய்யாமல் அகல்விளக்கேற்றிக் கொண்டாடுங்கள் என்கிறார் நுணாவிலூர் கா.விசயரத்தினம். கூடவே கேக் வேண்டாம். எமது பண்பாட்டிற்குரிய மாப்பண்டங்களில் ஒன்றைச் செய்து வருவோருக்கு வெட்டிக் கொடுங்கள் என்கிறார்.

மனிதரிடமுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு உணர்வுகளில் நகைச்சுவை உணர்வே முதன்மையானது என்கிறார் நகைச்சுவை உணர்வு எப்படி ஏற்படுகிறது என்ற தான் படித்துச் சுவைத்த சிறு கட்டுரையின் மூலம் சுதா.

அமரர் 4.3.2002இல் அமரரான வண்ணார்பண்ணை நாக.பத்மநாதன் அவர்கள் நினைவு கூரப் பட்டுள்ளார்.

இன்னும் பல....