Saturday, May 07, 2005

ஒரு நாளும் இல்லாத திருநாளாய்...


ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இண்டைக்கு எங்கடை நகரத்திலை சந்திரமுகி படம் ஓடீனம். நான் யேர்மனிக்கு வந்து 19 வருசமாச்சு. இதுவரையிலை ஒரு தமிழ்ப்படம் எங்கடை நகரத்திலை ஓடேல்லை. முந்தநாள்த்தான் ஒரு பெடியன் ரெலிபோன் அடிச்சு "அக்கா சந்திரமுகி படம் ஓடுறம், வாங்கோ அக்கா" என்றான்.

"எங்கை? எந்தத் தியேட்டரிலை?" எண்டெல்லாம் கேட்டுப் போட்டு, "ரிக்கற் என்ன விலை?" எண்டு கேட்டன். "15யூரோ" எண்டான்.

`அவ்வளவு காசோ...! நானும் என்ரை மனுசனும் போறதெண்டால் 30யூரோ வேணும். வீட்டிலை ஏதாவது படம் ரீவியிலை ஓடினால், ஆராவது என்னை ஆய்கினைப் படுத்தி கூப்பிட்டு படத்தைப் பார்க்க வைச்சாலே அரைவாசியிலை நித்திரையாப் போற ஆள் நான். இப்ப 30யூரோ குடுக்கட்டே!

ஓசிப்பேப்பர் ஓசி வலைப்பதிவு... எண்டு கொண்டு திரியிற என்னைப் பற்றி அவையளுக்கு விளங்கேல்லை.` நான் போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன். என்ரை மனுசனும் சொல்லிப் போட்டுது "இது ஊரிலை ஆடு அடிச்சு பங்குக்கு ஆள் சேர்க்கிற மாதிரித்தான்" எண்டு.

ஆனால் என்ரை பிள்ளையள் மட்டும் சொல்லிப் போட்டீனம். "எங்கடை தமிழ்ஆக்கள் படம் போடக்கை, அதுவும் எங்கடை நகரத்திலை போடக்கை, நாங்கள் போகாட்டில் சரியில்லை. அதால நாங்கள் போறம் எண்டு."

"சரி ஏதோ உங்கடை பிரச்சனை" எண்டு விட்டிட்டம்.

பார்த்தால் படம் தொடங்கிற நேரத்துக்கு அரைமணித்தியாலம் முதல்ல பிள்ளையைக் கொண்டு வந்த தந்து, "பேத்தியோடை கொஞ்சுங்கோ" எண்டு சொல்லிப் போட்டு அவை படத்துக் ஓடீட்டினம்.

பேத்தியோடை கொஞ்சிக் கொண்டிருக்கக்கைதான் ஓசியாய் வருகிற ஒரு பேப்பரிலை, சந்திரமுகியைப் பற்றி கனடா நண்பன் லண்டன் நண்பனுக்கு எழுதினது ஞாபகம் வந்தது. அட பேப்பர் வந்து கனநாளாப் போச்சு. இன்னும் அதைப் பற்றி ஒரு வார்த்தை வலைப்பதிவிலை எழுதேல்லை எண்டும் ஞாபகமும் வந்திச்சு.

இனி எழுதியும் என்ன...? அடுத்த பேப்பரே அங்கை லண்டனிலை வந்திட்டுது போலை இருக்கு. எல்லாளன் மறுபடியும் வந்தால் அங்கை பேப்பர் வந்திட்டுது எண்டுதான் அர்த்தம். (இது என்ரை ஒரு கணிப்புத்தான்.) ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. இந்தப் பேப்பரிலை எல்லாளன் எழுதியிருக்கிற கருத்திலை வழமைக்கு மாறா எனக்கும் நிறையவே உடன்பாடு.

எல்லாளன் மாதிரித்தான் எனக்கும். அப்பப்ப தொலைக்காட்சியிலை போற ஏதாவது நாடகங்கள் ஓரிரு நிமிடங்கள் என்ரை கண்ணிலையும் தட்டுப்படும். (ஓசியாய் ஏதாவது ஒளிபரப்பினால் மட்டுந்தான்). அந்த நேரங்களிலையெல்லாம் சடாரென்று தொலைக்காட்சி சணலை மாற்றிப் போடுவன். அவ்வளவு எரிச்சல் வரும் அந்த அழுகுணி நாடகங்களைப் பார்க்க. எந்த யுகத்துக் கதையளையெல்லாம் அவையள் எடுக்கினையோ எனக்குத் தெரியாது.

எங்கடை நாட்டுப் பொம்பிளையள் இந்த நாடகங்களைப் பார்க்கிறதுக்காண்டியே கார்ட் வேண்டி வைச்சிருக்கினமாம். இவையள் எல்லாளன் சொல்லுறது போலை அந்தந்த நாட்டு தொலைக்காட்சிகளில் போற தொடர் நாடகங்களைப் பார்த்தினம் எண்டால் எங்கடை தமிழ் தொலைக்காட்சிகளிலை போற நாடகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்குது எண்டது விளங்கும். அது மட்டுமே அந்தந்த நாட்டு மொழிகளையும் ஓரளவுக்கேனும் தெரிந்து தமது வேலைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும் முடியும்.

அடுத்து வசந்தனின் நாய்ப்பிறப்புகள் எப்பவோ வலைப்பதிவில் வந்தாலும் நான் ஒரு பேப்பரிலைதான் அதை வாசிச்சனான். நல்ல பதிவு. ஆனாலும் அந்தத் தலைப்புச் சரியோ எண்டு யோசிக்கிறன். அந்த நாய்களுக்குத்தான் எத்தனை வைராக்கியம். உயிரே போனாலும் வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் விட்டு வர மனமின்றி...

அறுவைப்பக்கத்தில் வழக்கம் போலை அல்வாசிட்டி விஜய் இடம் பிடிச்சிருக்கிறார்.

செல்வநாயகியின் ஆன்மீகம் அழகாகத் தொடர்கிறது.

சந்திரவதனா
7.5.2005