Sunday, June 19, 2005

வடலி

மோப்பக் குழையும் அனிச்சம் - முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பிள்ளைகளின் மனமோ அனிச்சம் பூவை விடவும் மென்மையானது. பெற்றோரின் முகம் கோணினாலே வாடிப் போய் விடக் கூடியது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது செலுத்தும் அதி கூடிய கட்டுப்பாடு குடும்பத்தின் பொருளாதாரநிலை, தாயின் மனநிலை, பிள்ளைகளுடனான தந்தையின் நெருக்கமின்மை... போன்றவை குழந்தைகள் வன்முறையாளர்களாக, பொதுநல நோக்கற்றவர்களாக, நற்பண்புகளை இழந்தவர்களாக வளர்வதற்கான காரணிகளாக அமைகின்றன என்பது கனேடிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளில் தெரிய வந்துள்ளது. பிள்ளைகள் 100வீதம் சரியானவர்களாக, தாங்கள் நினைப்பது போலானவர்களாக வளர வேண்டும் என நினைத்து, பல பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அளவுக்கதிமான கட்டுப்பாட்டை மிகக் கடுமையாகத் திணிக்கிறார்கள். இது பிள்ளைகளை உளரீதியாக எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். த.சிவபாலு(எம்.ஏ) அவர்கள் எழுதிய இது சம்பந்தமான கட்டுரை ஒன்று யூன் மாத வடலியில் இடம் பெற்றுள்ளது. பெற்றோர்கள் வாசித்துப் பயன் பெறுங்கள்.

இதை விட வைத்திய கலாநிதி ஆ.விசாகரெத்தினம் எழுதும் ஆய்வுக் கட்டுரை(சீவ உற்பத்தி) சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வந்துள்ளது. விந்து பற்றிய இன்றைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமூலர் சொல்லி வைத்திருக்கின்றார் என்ற செய்தி அதில் இடம் பெற்றுள்ளது. ஆச்சரியந்தான்.

இவைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வடலியை இணையத்தில் காணமுடியாதது பெருங்குறையே!

வடலியிலிருந்து கிடைத்த தகவல்களில் சில
நீரைக்காணாத வேர்கள் என்னும் திரைப்படம் வைகாசிமாதம் 22ம் திகதி விம்பிள்டன் பொல்கா அரங்கில் காண்பிக்கப் பட்டுள்ளது.வளர்ந்து வரும் இளங்கவிஞர் இரா.திலீபன் அவர்களின் புகழில்லாப் புகலிடம், ஈரவிழிகள், சொல் ஓவியம் என்ற மூன்று நூல்கள் கடந்த சித்திரையில் லண்டன் ஈலிங் துர்க்கையம்மன் ஆலயத்தில் வெளியிடப் பட்டன.