Tuesday, August 23, 2005
புத்தகம் பேசுது இதழுக்கு பாமாவின் பேட்டி-2
திண்ணியத்திலே மலத்தை வாயிலே திணிக்கல்லையா? இதைவிட காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்கு.. இப்படி கேவலமான விசயம் ஏராளம் நடந்துகிட்டுதான் இருக்கு வெண்மணிச்சம்பவம் நடக்கலியா? இப்படி நடக்குமான்னு கேட்கும்போது எனக்கு எரிச்சல் தான் வருது?
உங்க கருக்கு நாவல் தமிழின் முதல் தலித் தன் வரலாற்று நாவலா கருதப்படுது. அதுக்கு தமிழ் இலக்கிய வட்டாரத்திலே பிரமாதமான வரவேற்பும் கிடைச்சிருக்கு அந்த நாவலை நீங்க எந்தச் சூழல்ல எழுதுனீங்க.?
1990ல் கருக்கு வந்தது. அதை நாவல்னோ சுயசரிதைன்னோ நான் எழுதல. என் மன ஆறுதலுக்காக எழுதினது. 1985ல் ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சரா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான் கிறிஸ்துவ மடத்திலே சிஸ்டரா போனா தலித் பிள்ளைகளுக்கு உந்துசக்தியா இருக்கலாம் சுதந்திரமா செயல்படலாம்னு நெனைச்சு அதில சேர்ந்தேன். மூணுவருசம் சிஸ்டர் ஆகுறதுக்கான பயிற்சி. சிஸ்டரான பிறகு நாலுவருசும் அங்கு ஆசிரியராக வேலை பார்த்தேன். நான் எந்த நோக்கத்துக்காக போனேனோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாத்தியமே அங்கு இல்லே. பணக்காரங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூலுக்கு ஆசிரியராத்தான் இருக்க முடிஞ்சுது. மேல்மட்டத்து ஆட்களை மேலும் மேலும் தூக்கிவிடுகிற காரியத்தைத் தான் அவங்க செஞ்சுகிட்டிருந்தாங்க. என்னைப் போன்ற கஷ்டப்படும் தலித் மக்களுக்கு என்னால எந்தப் பிரயோஜனமும் இல்லங்கிறது ரொம்ப வேதனையா இருந்தது. என்னோட தலித் கலாச்சாரத்துக்கும் அங்குள்ள கான்வென்ட் கலாச்சாரத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகல எங்களோடது வெள்ளத்தியான கலாச்சாரம். அவங்களது அப்படி கெடையாது. பூடகமா வேஷம் போடுகிற மாதிரிதான் எனக்குப் புரிஞ்சுது. என்னால அப்படி வேஷம் போட்டுகிட்டு இருக்க முடியல எனக்குப் பொருத்தமில்லாத இடம்னு என் மனசுல பட்டது. அங்கிருந்து 1992லே வந்தேன்.
வெளியே வரும் போது வேற வேலை இல்ல. சேமிப்போ சொத்து சொகமோ எதுவும் கிடையாது. வெறுமனே வெறுங் கையோட வெளியே வர்றேன். ஏழுவருசம் உள்ளேயே கிடந்துட்டேன்ல சாதராண மனிதர்களோட உறவு கொள்ளவோ சமுதாயரீதியான வாழ்க்கைக்கோ தகுதி இல்லாத மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது. அது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு எதிர்காலம் பத்தின கனவு இல்லன்னாலும் அந்த நிகழ்காலத்துல வாழ்றதுக்கு கூட வழிவகை ஒண்ணும் தெரியல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல். என்ன பண்றதுன்ட்டு சின்னதா ஒரு வேலை பார்த்துகிட்டு ஜீவிதம் பண்ணிக்கிட்டிருந்தேன். என் கிராமத்து சந்தோசமான கலகலப்பான சூழல் எல்லாமே இழந்து போய் இன்னிக்கு இப்படி உட்காந்து இருக்கோமே என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டுச்சு. மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு ஏங்குகிற மாதிரியான சூழல் .எங்க குடும்ப நண்பர் மாற்குவிடம் என் சூழ்நிலையைச் சொன்னேன் வாழ்க்கையிலே ஒருபிடிமானமே இல்லாம அந்தரத்திலே இருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லி அழுதேன். அப்போதான் "இதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதி வை, மனசுக்கு ஆறுதலா இருக்கும்"னு மாற்கு சொன்னார். ஓரு ஆறு மாசம் மனசுக்கு என்ன என்ன பட்டதோ அதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதினேன். பிறகு வாசிச்சபோது எனக்கு நல்லா இருந்தது. அதை புத்தகமா போடலாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதிலே உடன்பாடு இல்ல. என் விசயம் மட்டுமல்ல அது ஊர்மக்கள் பலரோட விசயங்களும் கலந்து ஒரு கலவையா வந்திருந்தது. அது தலித்மொழி, பொதுமொழி என ரெண்டு மொழியிலேயும் கலந்து எழுதியிருந்தேன். ரெண்டு மூணு நண்பர்களும் வாசிச்சிட்டு இந்த தலித் மொழிநடை புதுசா இருக்கு மொத்தத்தையும் இதே மொழிநடையிலேயே கொண்டு வந்துட்டா நல்லா இருக்கும் என சொன்னாங்க. மறுபடியும் வந்துட்டா. எழுதி எடிட் பண்ணி கொடுத்தேன். புத்தகமா அவங்களே போட்டாங்க அப்படி வந்தது தான் கருக்கு. - மிகுதி