ஏதோ ஒரு உந்துதலில், அன்றைய பொழுதின் இறுக்கத்தில் அல்லது இனிமையில் என் மனப்போக்கில் எதையாவது எழுதுவேன். அவைகளில் முடிக்காமல் போனவை பல. அப்படியான ஒரு துண்டு இது. என் மனதுக்குள் இருக்கும் இதன் தொடர்ச்சியை எழுதி முடிப்பேனா அல்லது இப்படியே விட்டு விடுவேனா என்பது எனக்கே தெரியாத விடயம்.
என் கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும் கோட்டான்களினதும் கூச்சலும் சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக் குறுக்கறுத்து நின்ற பாலத்தைக் கடக்கும் போது குத்தெனத் தெரிந்த ஆற்றின் மீது படர்ந்திருந்த குளிர்ந்த அமைதி (ஏதோ ஒன்று) சுனாமியை ஞாபகப் படுத்தி என்னைக் கிலி கொள்ளச் செய்தது.
அழகான இயற்கை ஏதோ ஒரு கணத்தில் ஆக்ரோஷமாக உயிர் குடிக்கும் என்ற உண்மை இப்போதெல்லாம் அடிக்கடி மனசை உதைத்து விட்டுச் செல்கிறது. நேற்றிரவு பெண்கள் சந்திப்பு மலரில்(2004) வாசித்த, கருக்கு பாமாவின் அந்தி சிறுகதை நினைவுக்குள் உருண்டது. யாருக்கும் கடமைப் படாமல் தான் என்ற வீறாப்புடன் வாழ்ந்த கிழவி ஒரு இரவின் தனிமையில் மழையில் நிரம்பியிருந்த பள்ளத்தில் வீழ்ந்து இறந்து போன கதை சாதாரணமான கதைதான். ஆனால் அதைப் பாமா எழுதிய விதம் மனசைத் தொடும்படியாக இருந்தது. பல சொற்கள் விளங்கவில்லையானாலும் கதையோடிய விதம் மனசைப் படுத்தியது. அந்த நினைவில் சப்பாத்தையும் துளைத்துக் கொண்டு கால்விரல்களில் ஏறிய குளிரை மனசு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தது.
நான் தனியே நடந்து கொண்டிருந்தேன். ஆற்றங்கரையும் அதையொட்டிய புல்வெளியும் பனி போர்த்தியிருந்தன. தூரத்தில் அந்தப் பனியின் மேல் நின்று சில ஜேர்மனியர்கள் மிகவும் சிரத்தையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஆணானாலும் நீண்ட கூந்தலைப் பிடியாகக் கட்டியிருந்தார்.
மீண்டும் மீண்டுமாய் பாமாவின் கதாநாயகக் கிழவி மனசுக்குள் உருண்டாள்.
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டும் போது ஆசிரியர் பல தடவைகள் தலையை என் பக்கம் திருப்பினார். நான் நடந்து கொண்டிருந்தேன்.
இலக்கின்றிய நடையல்ல, இலக்கோடுதான். ஒரு மணித்தியாலம் நடக்கலாம் என்று தீர்மானித்த பொழுதே அந்த வீடுவரை போய் வரலாம் என்ற ஆவலும் கூடவே எழுந்தது. எத்தனை காலமாகி விட்டது அந்தப் பக்கம் போய்...! ஏதோ ஒரு உந்துதல் இன்று.
March - 2005
- தொடரும் -