சின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் வாடகைக்கு இருந்தார்கள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு பாண்டி. மாலை வேளைகளில் ஆண் பெண் பேதமின்றி எல்லோருமாகக் குழுமியிருந்து பாண்டி விளையாடுவார்கள். ஆண்களும் முகத்துக்கு அந்தப் பவுடர், இந்தப் பவுடர் என்று பூசி அழகு பார்ப்பார்கள். தேநீருக்கு ஏலம் தட்டிப் போட்டு நல்ல இனிப்பாகத் தந்து குடிக்கும் படி வற்புறுத்துவார்கள். அன்பாகவும் இதமாகவும் பேசுவார்கள்.
ஒரு நாள் அவர்கள் வீட்டில் உப்புக் கொட்டுப் பட்டு விட்டது. உடனேயே எல்லோர் முகமும் மாறி விட்டது. நடக்கக் கூடாத எதுவோ நடந்து விட்டதாக எல்லோரும் வருந்திப் பயந்து உப்பை அள்ளி எடுத்தார்கள். வாப்பா பார்த்து விடக் கூடாது என்ற அவசரம் அவர்கள் செயலில் தெரிந்தது.
ஆனால் இன்று வரை அதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. நானும் தெரிந்த முஸ்லீம் நண்பர்களிடமெல்லாம் இது பற்றிக் கேட்டு விட்டேன். அவர்களுக்கும் இந்த உப்புப் பிரச்சனை பற்றி எதுவும் தெரியவில்லை.
எந்தப் பொருளையும் கொட்டிச் சிந்துவது நல்லதில்லைத்தான். உப்பைக் கொட்டினால் அதில் உள்ள பிரத்தியேகமான தீமையோ அல்லது சம்பிரதாயக் கெடுதலோ என்ன?