Wednesday, December 28, 2005
ஊருக்கு உபதேசம்
தொலைக்காட்சித் தொடர்களிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிளிலோ அதிக ஈடுபாடு கொள்ள முடியாத நான், பாலுமகேந்திராவின் `கதைநேரம்` போனால் விட்டுவிடாமல் பார்ப்பேன். ஒரு பிரச்சனையை எடுத்து அதை கச்சிதமாகச் சொல்லி விடும் திறமை பாலுமகேந்திராவுக்குத்தான் என வியப்பேன்.
உண்மையிலேயே கதைநேரத்தில் வரும் ஒவ்வொரு பிரச்சனையுமே சாதாரணகுடும்பங்களில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள். அதைப் பார்ப்பவர்கள் தாமாகவே தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் விதமாகவும், பெண்களுக்கு... ஆண்களுக்கு... என்று உள்ள பிரச்சனைகளை சுற்றியுள்ளவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதமாகவும்.. மிகவும் நன்றாக தயாரித்து வழங்கப் படுகின்றன.
அதில் நடிக்கும் மௌனிகா உட்பட எல்லோருமே மிக இயல்பாக நடிப்பார்கள்.
இன்று எதேச்சையாக பழைய குமுதம் ஒன்றைப் புரட்டிய போது... - ஒரு பழைய செய்திதான் - என் கண்ணில் பட்டது.
இந்தளவு உபதேசிக்கும் விதமான கதைகளைப் படமாக்கித் தரும் பாலுமகேந்திராவும் அந்தப் பெண் மௌனிகாவும் திருமணம் செய்து கொண்டு விட்டார்களாம். எனக்குச் சப்பென்றாகி விட்டது. என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஏமாற்றமாகவும் போய்விட்டது. இந்தளவுக்கு ஊரைத் திருத்தும் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு பெண்ணால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ..? இந்தளவு பிரச்சனைகளை உணர்ந்து கதைகளைத் தரும் பாலுமகேந்திராவால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ...?