Thursday, September 14, 2006

அப்பாவின் பாதிப்பு - Annegrate


அன்று எனது பேரூந்துப் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டவள் அனெக்கிரேட். இவளை நான் கடைசியாகச் சந்தித்தது நூர்ஜானைச் சந்திப்பதற்குச் சில மாதங்கள் முன்பு.

அனெக்கிரேட் எனது கடைசி மகனுடன் முதலாம் வகுப்பிலிருந்து இறுதி ஆண்டுவரை ஒன்றாகப் படித்தவள். இறுதிப் பரீட்சையில் நல்ல புள்ளிகளைப் பெற்றிருந்தாள். ஆனாலும் அவள் விரும்பிய இசைத்துறைக்கான இடம் பல்கலைக்கழகத்தில் அவளுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவளோடு படித்தவர்கள், நண்பர்கள் என்று அனேகமான எல்லோருமே வேலை, மேற்படிப்பு என்று வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட இவள் கொஞ்சம் தனிமை உணர்வோடு எமது நகரிலேயே இருந்தாள். அந்த நேரத்தில் அவளை அடிக்கடி நான் சந்திப்பேன். எப்போதும் ஒரு இசைக்கருவியை தன்னுடன் கொண்டு திரிவாள். இசை வகுப்புக்குப் போகிறேன் என்பாள்.

அவளோடான சந்திப்பு எப்போதுமே மிக இனிமையாக இருக்கும். சிரித்துச் சிரித்து நிறையக் கதைப்பாள். பாடசாலைக் காலங்களில் பெற்றோர்களுக்கான ஒன்றுகூடலிலும், பிள்ளைகளோடான பிக்னிக் குகளிலும் அவளது தாயும் பங்கு கொள்வதால் தாயோடும் எனக்கு ஓரளவு பழக்கம் இருந்தது. தாயும் இவளைப் போலவே சந்தோசமாகப் பழகக் கூடியவள்.

ஒரு நாள் அனெக்கிரேட்டை பேரூந்தினுள் சந்தித்த போது தனக்கு வடக்கு ஜேர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும் , ஒரு மாதத்தில் போய் விடுவேன் என்றும் மிகவும் சந்தோசமாகச் சொன்னாள். பின்னர் சற்றுக் கவலையாக "அம்மாதான் தனித்து விடுவாள்" என்றாள்.

"ஏன்... உனது அப்பா...?" என்றேன்.

"எனக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அப்பா அம்மாவை விட்டிட்டுப் போயிட்டார்" என்றாள். அப்போதுதான் எப்போதுமே அவளது அம்மா தனித்து வருவது என் சிந்தனையைத் தொட்டது.

"உனக்கும் உனது அப்பாவுக்கும் தொடர்பிருக்கிறதுதானே" என்றேன்.

அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் கலந்த வெறுப்பு தோன்ற "எனக்கு ஏழு வயதா இருக்கிற போதே அப்பாவை மெயின்ரோட்டிலை இருக்கிற அவற்றை வீட்டுக்கு முன்னாலை ஒரு குழந்தையோட பார்த்தனான். என்ரை அப்பா இன்னொரு குழந்தையைத் தூக்கி வைச்சிருக்கிறது எனக்கு சகிக்கேல்லை" என்றாள். தொடர்ந்த கதையில் அவள் அதன் பிறகு அவளது அப்பாவைக் காணவோ, அவரோடு பேசவோ விரும்பவில்லை என்பது தெரிந்தது.

வழமைக்கு மாறாக அன்றைய அவளோடான சந்திப்பு சற்று மனதைச் சங்கடப் படுத்த நாங்கள் விடை பெற்றோம். அவள், அப்பா இல்லாமலே வளர்ந்திருக்கிறாள் என்ற உண்மை அத்தனை வருடங்களில் எனது கவனத்துக்கு எட்டாதது எப்படி என்ற ஆச்சரியம் எனக்குள்ளே தொடர்ந்து இருந்தது.

அதன் பின் அவளது அம்மாவைச் சந்தித்த ஒரு பொழுதில் "அவள் அடிக்கடி இங்கு வரமாட்டாள். நியாயமான தூரம்" என்றாள். அப்படி இடையிடையே அவள் எமது நகருக்கு வந்த போதும் எதேச்சையாகத்தான் என்றாலும் அவளை நான் சந்திக்கும் வாய்ப்புக்களை எனது பேரூந்து எனக்குத் தந்து கொண்டுதான் இருந்தது.

ஒரு கட்டத்தில் அவளை ஒவ்வொரு மாதமும் சந்தித்தேன். இன்னும் சில காலங்களில் ஒவ்வொரு வாரமும் சந்தித்தேன்.

"என்ன...! இப்படி அடிக்கடி வருகிறாய்?" என்ற போது மிகுந்த சந்தோசமாக "எனக்கு இப்ப ஒரு நண்பன்(காதலன்) இங்கே இருக்கிறான்" என்றும், "அவனைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை" என்றும் சொன்னாள்.

"அப்படியா...? சந்தோசம்" என்று அவளை வாழ்த்தி விட்டு வேறு கதைத்தேன்.
விடைபெறும் போது "நீ எனது நண்பனைப் பார்க்கவில்லையே! பொறு! நான் அவன்ரை புகைப்படத்தைக் காட்டுறன்" என்று சொல்லி தனது கைப்பையில் இருந்து எடுத்தாள்.

நான் அதிர்ந்து போனேன். அந்தப் புகைப்படத்தில் இருந்தவன் அவளின் அப்பாவின் வயதை ஒத்த 45 வயதுடைய ஒரு மெக்சிக்கன் ஆண்.

சந்திரவதனா
14.9.2006

3 comments:

  1. ... அந்த பிள்ளை அப்பாவை பழிவாங்கிறன் என்று நினைக்குதா... அல்லது சிகமன் பிராய்ட் சொன்ன ஒடிபஸ் கொம்பிளக்சா...

    ReplyDelete
  2. அப்பாவுக்கான இத்தனை நாள் காத்திருப்பு! அவனின் உருவில் அப்பாவைக் காண்கிறாளோ!!
    ஒரு நல்ல நண்பனால் எல்லா உறவுகளாகவும் இருக்க முடியும் தானே!
    இல்லையா சந்திரா!

    ReplyDelete
  3. சின்னக்குட்டி
    நிட்சயமாக அனெக்கிரேட் தனது அப்பாவைப் பழிவாங்குவதாக நினைக்கவில்லை.
    உதயா சொன்னது போல (அப்பாவின் அன்பு கிடைக்காமல் இருந்ததால் அல்லது அப்பாவின் எந்த அருகாமையும் கிடைக்காததால்) அப்பாவுக்கான ஏக்கத்தின் பிரதிபலிப்பு இது. அப்பா என்ற உறவை அந்த நண்பனின் உருவில் காண்கிறாள்.

    உதயா
    நீங்கள் சொல்வதுதான் பொயின்ற். அப்பாவுக்கான காத்திருப்பு. அவனின் உருவில் அப்பாவைக் காண்கிறாள்.

    ஒரு நல்ல நண்பனால் எல்லா உறவுகளாகவும் இருக்க முடியும் தானே!
    மிகச் சரி உதயா.

    ReplyDelete