Friday, June 02, 2006

மழையை எனக்கும் பிடிக்கும்

என்ன இது? கண் மூடி விழிப்பதற்குள் கொளுத்தி எறிந்த வெயிலில் பளபளத்துக் கொண்டிருந்த நகரில் இருள் சூழ்ந்து கொண்டது. அண்ணாந்து பார்த்தேன். கார்முகிலின் ஊர்வலம். அங்கொன்று இங்கொன்றாய் ஓரிரு மழைத்துளிகள்.

எல்லோரும் பஸ் தரிப்பிடங்களையும், கார் தரிப்பிடங்களையும் நோக்கி விரையத் தொடங்கினார்கள்.

"அந்தக் கடைக்கு இனிப் போகேலாது. நாங்கள் சாதிக்க மாட்டோம். வா போவோம்." சில குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய்மார்கள் ஓடினார்கள்.

மழை கொட்டப் போகின்றது என்பதை அவர்கள் திடமாகக் கணித்துக் கொண்டார்கள்.

சில நிமிடங்களில் நகர்வீதி வெறிச்சோடி... பொட் பொட்டென்று பெருந்துளிகளாய் என்னையும் மண்ணையும் தொட்ட மழையில் நான் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

தாழ்வாரங்களிலும், கடை வாசல்களிலும் ஒதுங்கியவர்கள் குடை இல்லாமல் நடை போடும் என்னை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மழை எனக்குப் பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது.