Sunday, July 16, 2006

இணையத்தளங்களால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டதா?


ஐபிசி தமிழில் செவ்வாய்க்கிழமை இரவு இலக்கிய மாலை நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இம்முறை வாசிக்கும் பழக்கத்தை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் என்ற கருத்துப்படவே விடயங்களைக் கலந்துரையாடினார்கள்

நூலகவியலாளர் செல்வராஜா, வெளியான புத்தகங்கள் பற்றியும், வாசிப்பின் அவசியத்தைப் பற்றியும் அழகாகச் சொன்னார். தொலைபேசி அழைப்பில் வந்தவர்கள், இன்னும் பலவிதமான கருத்துக்களைச் சொன்னார்கள்.

பிறந்தநாளுக்கோ அன்றி வேறு விசேடங்ககளுக்கோ பரிசளிக்கும் போது, புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கொடுங்கள் என்று கௌரி.மகேஸ்வரன் சொன்னார். உண்மையிலேயே அது வரவேற்கப் படக் கூடிய நல்ல கருத்து. நூல்களைப் பரிசாக, அன்பளிப்பாகக் கொடுப்பதும், பெறுவதும் ஒரு இனிய விடயம்தான். ஆனாலும் நூல்களை அன்பளிப்பாகத் கொடுத்து விட்டால் மட்டும் வாசிக்கும் தன்மை அதிகரித்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னுமொருவர் கருத்துக்களைத் தரும் போது, இணையத் தளங்கள் அதிகமானதால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டது எனக் குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜெனோ, நூலகவியலாளர் செல்வராஜாவோ ஏனோ அந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இணையத்தளங்களில் உள்ள விடயங்களை வாசிக்காமல் எப்படிக் கிரகித்துக் கொள்வது, என்பது எனக்குப் புரியவில்லை. இணையத்தளங்களின் வரவு வாசிக்கும் தன்மையைக் கூட்டியிருக்கின்றது என்றே என்னால் சொல்ல முடிகிறது.

எனது கருத்து சரியா தவறா என்பதை அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

சந்திரவதனா
15.7.2006