Tuesday, September 19, 2006

பன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ!

திலீபன் மாமா திலீபன் மாமா
தண்ணியை மறந்து தவித்தது ஏனோ!
புண்ணிய ஈழம் மலர்வதற்காக
பொன்னுடல் தன்னை வெறுத்தீர்தானோ!

அந்நிய நாய்கள் அலட்சியம் செய்ய
பன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ!
மண்ணினை மீட்கும் புனிதப் போரில்
நின்னுடல் எரித்து நிலைத்து நின்றீரோ!

தேசங்காக்கும் வீரப்போரின்
பாதை ஒளிர விளக்கானீரோ!
பாச மக்கள் நெஞ்சந் தொட்டு
தேச வழியில் திருப்பி வைத்தீரோ!

வேசம் கலைந்த மாற்றான் படைகள்
தேசம் அகன்று செல்ல வைத்தீரோ!
வீசும் தென்றல் காற்றில் கூட
தியாக ஒளியை மிளிர வைத்தீரோ!

நினைவில் என்றும் நிலைத்தீர் மாமா
ஈழப் படகின் கலங்கரை விளக்காய்
காலம் முழுதும் ஒளிர்ந்திடும் உம்மை
மானத் தமிழர் மனதில் நிறைத்தோம்.

தீட்சண்யன்
1992