மனசின் இடுக்குகளில் திட்டுத் திட்டாய் பயம் ஒட்டியிருக்க, என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தில் குந்துவதும், நெல்லி மரத்தை அண்ணாந்து பார்ப்பதுவும், சிதம்பரத்திகளில் கெந்துவதுமாய்... நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துக் கொண்டிருந்தன. நான் எனது உடமைகளுடன் பேரூந்தினுள் நின்றேன்.
கிளிநொச்சி வெண்புறா நிலையத்திலிருந்து புறப்பட்டதில் இருந்து இதுவரையிலான பொழுதுகளின் வெயில் குளிப்பிலும், நிச்சுதனுடனான மோட்டார் சைக்கிள் பயணத்தின் அலுப்பினிலும் உடல் களைத்திருந்தது. மீண்டும் மீண்டுமாய் வேர்த்ததில் முகத்தில் ஏதோ ஒன்று படர்ந்து காய்ந்திருப்பது போன்ற உணர்வு தோன்றியது. தாகம் தண்ணீருக்காய் ஏங்க வைத்தது.
ஜேர்மனியில் பிள்ளைகளை விட்டு விட்டு வந்து, கிளிநொச்சியில் கணவரையும் விட்டு விட்டு நான் மட்டுமாய் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் என் வீடு நோக்கிச் செல்கிறேன். இடையிடையே என் மன இடுக்குப் பயங்கள் எட்டிப் பார்ப்பதில் நெஞ்சு திக்கிட்டுத் திக்கிட்டு அடங்குகிறது.
"நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வாறிங்களோ..?"
பேரூந்தின் நெரிசலுக்குள் உடமைகளோடு தள்ளாடித் தளர்ந்து நின்ற என் முகத்தில் ஏதாவது எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ..! பக்கத்தில் நின்றவன் கேட்ட போது தடுமாறி "ஓம்" என்றேன். வரணி, கொடிகாமம்... என்று பேரூந்து தாண்டிக் கொண்டிருந்தது. வெளியில், கிளிநொச்சி போல வரண்டில்லாமல் பச்சை, பச்சையாய்... குளிர்ச்சியாய் `மா´ க்களும், `தென்னை´களும்... மிக மிக அழகாக... போரின் வடுக்கள் எதுவுமே தெரியாமல் உயிரோட்டமாகத் தெரிந்தன.
"கனகாலத்துக்குப் பிறகு வாறிங்களோ..?"
"ஓம்.. 16 வருசத்துக்குப் பிறகு வாறன்.
ஏன்.. எப்பிடி... அப்பிடிக் கேட்கிறீங்கள்..?"
"ஏதோ..! உங்கடை முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பயம் ஆர்வம் இரண்டும் உங்கடை கண்ணிலை இருக்குது."
இவனென்ன மனம் பார்க்கும் கண்ணாடி வைத்திருக்கிறானோ..? மனதுக்குள் வினாவினேன்.
"எந்த இடத்துக்குப் போறிங்கள்? உங்கடை... ஆராவது இங்கை....?"
அவனது கேள்வி மாவீரராக.. யாராவது என்பது போலவே எனக்குப் பட்டது. எனது தம்பிமார் மாவீரர் என்பதைச் சொல்வது சில சமயம் எனக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.. ஒரு கணம் உள்ளுணர்வு எச்சரிக்க "இல்லை... ஆத்தியடியிலை என்ரை வீடிருக்கு. அங்கைதான் போறன். தங்கைச்சி இருக்கிறா." என்றேன்.
சடாரென இரண்டு சீற்றுக்கு முன் இருந்த இளைஞன் திரும்பி "ஆத்தியடிக்கே போறிங்கள்? நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறன். ஓராங்கட்டையிலை இருந்து சூட்கேசுகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாறன்." என்றான்.
நிட்சயம் அவன் எனது தூரத்து உறவினர்களில் ஒருவனாக என் ஊரவனாகத்தான் இருப்பான். ஆனாலும் ரவுணுக்குப் போனால் ஓட்டோ பிடித்துக் கொண்டு சுலபமாக வீடு போய்ச் சேர்ந்து விடலாம். ஏன் யாரிடமாவது கடமைப் பட வேண்டும் என்ற நினைப்பில் நன்றி சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மனசுக்குள் இனம் புரியாத படபடப்பு. வந்து விட்டேன் என்ற நம்ப முடியாத ஒரு உணர்வு. கிராமக்கோட்டையும் கடந்து, மணியம் மாஸ்டரின் ரியூற்றரியைக் கடந்து.. ஓராங்கட்டையடிக்கு வந்த போது உதவுவதாகச் சொன்ன இளைஞன் இறங்கிக் கொண்டான்.
ஓராங்கட்டைச் சந்தி வீடு, மாமாவின் வீடு. முன்னர் கலகலத்துக் கொண்டிருந்த அந்த மெத்தை(மாடி) வீடு களையிழந்து போய் தெரிந்தது. பேரூந்து புறப்பட்டதுந்தான் சந்தியின் மற்றப்பக்க மூலைக் காணிக்குள் கேணல் சங்கரின் பெயர் எழுதிய கொடி மரத்தோடு சரிந்திருந்தது தெரிந்தது. எனக்குள் எழுந்த கேள்விக்கு, முதலில் கதை கொடுத்தவன் பதில் தந்தான். "ஆமி கோவத்திலை எல்லாத்தையும் அடிச்சு விழுத்திப் போட்டான்."
என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறானோ? அவனைத் தீர்க்கமாகப் பார்த்தேன். தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
மருதடியையும் தாண்டிய பேரூந்து பருத்தித்துறை ரவுணுக்குள் வந்து நின்ற போது எனக்கு வேறெங்கோ நிற்பது போன்ற பிரமையே தோன்றியது. களைத்து விழுந்து வெளியில் இறங்கிய போது மந்திகள் போல மரங்களிலும் மதில்களிலும் சீருடை துப்பாக்கி, சகிதம் சிங்கள இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் இருப்பவர்கள் கூட என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ஏளனமா, நட்பா என்று பிரித்தறிய முடியாத சிரிப்புகள்.
நியூ மார்க்கற்றைக்(புதிய சந்தை) காணவில்லை. நடுவெல்லாம் வெளியாய், சுற்றி வரக் கடைகள் என்று இருந்தன. முந்தைய அழகையோ கலகலப்பையோ அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை என்னையும் தொற்றிக் கொண்டது. முன்னர் இல்லாத ஓட்டோக்கள்(முச்சக்கர வாகனம்) மட்டும் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. சில நிறுத்தியிருந்தன. நிறுத்தியிருந்த ஒரு வாகனச் சாரதியை அழைத்து எனது வீட்டு முகவரி சொல்லிப் போக வேண்டும் என்றேன். 500ரூபா என்றான். ஏறிக் கொண்டேன்.
பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக தங்கப்பழத்தின் சைக்கிள் கடையைத் தாண்டிய போது "நீங்கள் பிரபாக்கா வீட்டையோ போறிங்கள்?" சாரதி கேட்டான். "ஓம்" என்றேன். "அப்ப நீங்கள் மொறிசின்ரை அக்காவோ?" "ஓமோம்." ஊர் நிலைமைகளையும் சொல்லிக் கொண்டு வந்தான்.
ஹாட்லிக் கல்லூரி வீதியில் ஆத்தியடியை நோக்கி வாகனம் விரைந்த போது மனசு பறந்தது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வில் கண்கள் பனித்தன.
ஆத்தியடிதான் எனது ஊர். அங்கே ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க, அலரிகளால் எல்லை போட்டு அழகான அளவான புனிதமான ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்திமரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப்பட்ட இடந்தான் பின்னர் ஊர் கூடி உணர்வோடு வழிபடும் இடமாகி அத்திமரப் பிள்ளையாரினால் ஆத்தியடி என்ற ஊரானதாக அம்மம்மா சொல்லியிருக்கிறா. ஆத்தியடி எனது ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குள் அளவிலா ஆனந்தம்.
சப்பரம் என்றால் என்ன, தேர் என்றால் என்ன, சூரன் போர் என்றால் என்ன, அந்தப் பெரிய வடக்கு வீதியில் சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைத்து... மறக்க முடியாத நினைவுகள். அப்பாவின் கைபிடித்து அந்த வீதியில் நடந்ததிலிருந்து என் பிள்ளைகளை என் கையில் பிடித்து அந்த வீதியில் நடந்தது வரை எல்லாமே இனிமை.
வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். காற்பந்து என்றால் என்ன, கைப்பந்து என்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது.
தெற்கு வீதியில் ஆல், அரசுகளின் கீழ் பிரமாண்டமான நீளமான செதுக்கப் பட்டது போன்ற கற்கள். அவைகளில் நான் சின்னப் பெண்ணாக இருந்த போதுதான் இருந்திருக்கிறேன். வளர்ந்த பின் அவை பெண்களுக்குச் சொந்தமில்லை. ஆண்களின் சொத்துக்கள் அவை. அந்தக் கற்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர்கள் மேல் எனக்குப் பொறாமை வரும்.
ஆத்தியடி என்றாலே கண்முன் தோன்றும் பிள்ளையார் கோயிலை விட்டுச் சந்திக்கு வந்து, கிழக்கே நோக்கினால் கோயில் ஒழுங்கை விநாயகர் முதலியார் வீதியை நோக்கி வளைந்திருக்கும். வெள்ள வாய்க்காலோடு உள்ள சந்திக் கிணற்றிலே கோவணத்துடன் யாராவது குளித்துக் கொண்டிருப்பார்கள். அனாதரவாய் நிமிர்ந்திருக்கும் ஆவுரஞ்சிக் கல்லில், எப்போதாவது யாராவது ஒருவர் முதுகு தேய்த்துக் கொண்டிருப்பார்.மாடுகள் பக்கத்துத் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். பனைகளில் இருந்து கொட்டிய பாளைகளும் பன்னாடைகளும் ஒழுங்கை முழுவதும் கோலம் போட்டிருக்கும்.
தெற்கே நோக்கினால் வடமராட்சி வீதி தெரியும். வீடுகளைப் பார்த்தால் மாமரம் இல்லாத வீடுகள் இல்லை. வேலிகள் எல்லாம் பூவரசும், கிளிசறியாவும், வாதனாராயணியும், ஒதியுமாகப் படர்ந்திருக்க, இடையிடையே சிதம்பரத்தி சிவந்திருக்கும். ஆங்காங்கு பாவாட்டைகளும் பரந்திருக்கும்
மேற்கு நோக்கினால் ஆத்தியடி ஒழுங்கை. முதலிலே தெரிவது வெறுங்காணியில் தனி ஒரு புளிய மரம். அதைச்சுற்றி நான்கைந்து பனைமரம். வேலியெல்லாம் பாவட்டையும், அண்ணாமுண்ணாவும். புளியின் அடியில் பெரிய பாம்புப் புற்று. அடிக்கடி உழுத்தம் பிட்டு மணக்கும். நாகபாம்புதான் அதற்குள்ளே வாழ்வதாய் ஆத்தியடி மக்களுக்கு அபாரமான நம்பிக்கை. விருட்சமாய் காணியை நிறைத்திருக்கும் அந்தப்புளி காய்ப்தே இல்லை. பூக்கும். சருகாகி விடும்.
வடக்கே நோக்கினால் ஹாட்லிக் கல்லூரி வீதி நீண்டு தெரியும். ஆர்ப்பரிக்கும் கடலலையின் ஒலி, ஒரு தாலாட்டுப் போலக் காதில் விழும். சற்றுத் தள்ளி கண்களைச் சுழற்றினால் வடக்கு வீதியைத் தாண்டி பனைகள், பனைகள்... எழுதி முடிக்க முடியாத அழகான சின்னஞ்சிறிய ஊர். அங்கு வாழக் கொடுத்து வைக்காத என்னை அது வரவேற்றதா? தெரியவில்லை.
மேற்கு நோக்கிய அந்த ஆத்தியடி ஒழுங்கையில் முச்சக்கர வண்டி நுழைந்த போது அந்தப் புளிய மரத்தைக் காணவில்லை. மூச்சு முட்டித் திணறும் படியாக ஒரு பெரிய மாடிவீடு காணியை முழுவதுமாக நிரப்பிய படி முளைத்திருந்தது. என் வீட்டின் முன் வந்து இறங்கிய போது கேற்றில் பெரிய மாங்காயப்பூட்டு தொங்கியது.
சந்திரவதனா
16.10.2006
2002 இல் எனது தாயகம் நோக்கிய பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினேன். ஆறுக்கு மேல் அது தெடராமலே நின்று விட்டது. இப்போது மீண்டும் தொடர்கிறது.
தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5
தாயகம் நோக்கி - 6
இன்னும் தொடரும்