Saturday, October 21, 2006
உங்கள் நினைவுத் திருநாள்தான் எமது தீபாவளி
மாவீரரே!
உங்கள் நினைவுத் திருநாள் தான்
ஈழவர் எமது
தீபாவளியென்று கொண்டாடுகின்றோம்,
தீபங்கள் ஏற்றி மன்றாடுகின்றோம்,
நரனுக்கெதிரான நரகாசுரப் போரென்றும்,
அவனே அவர்களது ஆற்றொணா விரோதியென்றும்,
ஆரியர்கள் நடத்தி விட்ட அட்டகாசமே
போரியற் துறையில் புதினமாய் வடிவெடுத்து
பார்- இயல் ரீதியில் பிரச்சாரமானது...
பதிவுகளும் பெற்றது...
புரிந்து கொண்டீரோ...!
கதையின் வேர் அதுவல்ல!
எமக்கேயான எல்லையைக் காக்க
தமக்கேயான வலுவுடன் போரிட்டு
தரையில் புதைந்த நம்மவர் தினத்தை
தீபமேற்றி நற்திருநாளென
தூய நினைவுடன் மலர்கள் தூவி
தூபியின் முன்னால் மண்டியிட்டு
ஆண்டாண்டான தமிழர் தினமாய்
வரித்துக் கொண்டோம் வணங்கி நிற்போம்.
வரலாறு என்றால் என்னப்பா?- வெறுமனே
வந்தவையும் போனவையும் கூறும்
புரையேறிப்போன வாசக வடிவங்களா?
இல்லையப்பா!
புதிதாக நாமமைக்கும் புனிதப் பாதையதன்
போக்கும் வீச்சும் நேர்த்தியும் உறுதியும்
வளைவும் நெளிவும் சுழிவும் மிதப்பும்
நீக்கமற நேர்மையாய்க் காட்டி விடும்
போற்றலுக்குரிய பெரும் பாதையல்லவோ!?
நாமமைக்கும் பாதையது- அதாவது,
நீர் சிதைந்து உருவான விடுதலைப் பாதையது
மாவீரர் நீரெல்லாம் மண்ணுள் மண்ணாகி - எம்
கண்ணுள் ஊற்றுடைத்து கட்டிய பாதையது
இது வெறும் கல்லாலும் மண்ணாலும் கரியநிறத் தாராலும்
கனவேக வாகனங்கள் வந்து சறுக்கி நிற்கும்,
பொல்லாத பரல் மணலும் ஊரியும் சிறு கல்லும்
உருவாக்கி வைக்குமொரு சடத்துவப் பாதையா!?
அல்லவே அல்ல ஐயா!
விடலைப் பருவமதில் வீரமுடன் களமிறங்கி
சுடலைப் பயமோ சுகபோக நினைவோ
சொட்டும் மனதிருத்தா சுடர் ஒளித் திருவுருவாய்
கடலையும் காட்டையும் களமாடிக் கரைந்துறையும்
குடலைக் கொழுந்துகள் நீர் காட்டி நின்ற பாதையன்றோ!
மறப்போமா நாமும்மை மாவீர நாயகரே,
கிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்,
இரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்,
பறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்,
கரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு
சுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர-நெய் ஊறலிட
வரப்பால் வழிநடந்தும் உரைப்பால் உளங்கவர்ந்தும்
நெருப்பாய் நிலையுணர்த்தி நித்திலத்தின் புரவலராய்
பரப்புரையும் செய்வோம் படைநடப்பும் செய்வோம்.
கரப்பால் மூடிய குஞ்சுகளாய் நாம் இருப்பதினி நடவாது-வான்
வரப்பிலும் பலவீரம் காட்டும் வகை வளர்ந்து விட்டோம்.
நினைப்பால்...
உம் நினைப்பால்...
நீர் வளர்த்த பெரு நெருப்பால்...
நாம் மூண்டு விட்டோம்- இனி
ஒருக்காலும் ஓயோம், உம் கனா
நிஜத்தால் உயிர்வுறும்-ஆம்
உருப்பெறும், இது உறுதி. (கவிதையை முழுமையாகப் படிக்க...)
தீட்சண்யன்
8.12.97
ஒலிபரப்பு - 29.12.97 புலிகளின்குரல்வானொலி.