Wednesday, February 14, 2007

சாகரன்


மரணம் எம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் எம்மிலிருந்து ஒருவரைப் பிரித்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் செல்லும் போது எம்மால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. மரணித்தவருக்கும் எங்களுக்கும் இடையிலான அன்புப் பிணைப்பின் அளவுக்கு ஏற்ப நாங்களும் கலங்குகிறோம். துடிக்கிறோம், துவள்கிறோம்.

சாகரனின் மரணம் பற்றிய செய்தியும் என்னை ஒரு கணம் அதிர வைத்தது. மனதில் கவலையைப் படர வைத்தது. சாகரன் வலையுலக நண்பர்களில் சாதாரண ஒருவர் என்று சொல்லி விட முடியாத படி அன்போடு பழகியவர். எதிர்பாராத நேரங்களில் தானாக முன்வந்து உதவியவர்களில் ஒருவர். அவரைப் பற்றிய தனிப்பட்ட எந்த விடயங்களும் எனக்குத் தெரியாதாகினும் வலையுலகில் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். எப்போதாவது எனது வலைப்பதிவில் ஏதாவதொரு தவறைக் கண்டு விட்டாலும் உடனடியாக எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பி அதைச் சரி செய்யுமாறு வேண்டிக் கொள்பவர்.

முகம் பார்க்காமலே, நட்பாக மனதில் இடம் பிடித்தவர்களில் சாகரனும் ஒருவர். அவருக்கு 29வயதுதான் என்பது கூட அவர் இவ்வுலகை விட்டுப் போன பின்னர்தான் எனக்குத் தெரிகிறது.

இப்போது அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக் கூடிய வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை. காலந்தான் அவர்களை ஆற்ற வேண்டும்.