வீட்டுக்குள் நுழைந்ததும் வழமை போல வானொலியை அழுத்தினேன். பாடவில்லை. பேசவில்லை. மௌனம் காத்தது.
அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டதால் யன்னல்களுக்குரிய சட்டர்கள் இன்னும் இழுக்கப் படாமலே இருந்தன. வெளி வெளிச்சம் இடைவெளிகளினூடு வீட்டுக்குள் நுழைய முயற்சித்தாலும் மெல்லிய இருள் கவிந்திருந்தது. ´ஏன் பாடவில்லை´ என்ற யோசனைக்கு முன்னரே வழமையான அவசரத்துடன் அடுத்த கட்ட வேலையாக யன்னலை நெருங்கி சட்டரை மேல் உயர்த்துவதற்கான பட்டனை அழுத்தினேன். ம்... கும். அதுவும் அசமந்த தனமாக அப்படியே நின்றது.
அப்போதுதான் உறைத்தது. மின்சாரம் இல்லை. ஜேர்மனியில் அப்படி நடப்பது அபூர்வம். மின்சாரத்தை ஏதாவது காரணத்துக்காக நிறுத்துவதாக இருந்தாலும் முற்கூட்டியே அறிவிப்பது மட்டுமல்லாமல் அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசற்கதவிலும் ´இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை மின்சாரம் நிறுத்தப் படும்´ என்பதை எழுதி ஒட்டி விடுவார்கள்.
வெளியில் விரைந்து கதவைப் பார்த்தேன். ஒன்றும் ஒட்டவில்லை.
அப்படியானால் எனது வீட்டில்தான் ஏதும் பிரச்சனையோ என்று நிலக்கீழ் அறைக்குப் போய் பார்க்க முயற்சித்தால் அங்கு கும்மிருட்டு. வெளி வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்த அந்த அறையில் தட்டித் தடவி, பின்னர் ரோச் நினைவு வர அதை எடுத்துப் பார்த்தால் எனது வீட்டில் பிழை இல்லை.
மின்சார இலாகாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள எண்ணி தொலைபேசியைத் தட்டினால் அதுவும் உயிரிழந்தது போல இருந்தது.
ம்... வசதிகள் அதிகமானாலும் பிரச்சனைதான். இலக்கங்களைச் சுழற்றித் தொலைபேசிய காலம் போய் அழுத்தித் தொலைபேசும் காலம் வந்தது. அது கூடப் பரவாயில்லை. இப்போது தொலைபேசிகள் கூட மின்சாரத்தில். இந்த நிலையில் மின்சாரம் போனதும் வீட்டில்
எல்லாமே ஸ்தம்பிதம் அடைந்தது போல என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது.
அந்த நேரத்தில் அடுத்த ஆபத்பாந்தவன் கைத்தொலைபேசிதான். வசதிகளின் அதிஉச்ச பாவனைகளில் ஒன்றான கைத்தொலைபேசி கை கொடுக்க மினசார இலாகாவுடன் தொடர்பு கொண்ட போது "வீதி திருத்த வேலையின் போது ஒரு வயர் அறுந்து விட்டது. இரண்டு மணித்தியாலங்களில் சரி செய்து விடுவோம்" என்றார்கள்.
இரண்டு மணித்தியாலங்களும் என்ன செய்வது? கணினிக்கும் மின்சாரம் வேண்டுமே. மனம் அலுத்துக் கொண்டது.
சரி எதற்கும் முதலில் தேநீரை அருந்துவோம் என நினைத்து குசினிக்குள் சென்று தண்ணீர் சூடாக்கும் குவளையை எடுத்து தண்ணீர் விட்டு சுவிச்சை அழுத்தினேன். ம்... கரண்ட் இல்லை.
சுள்ளித் தடிகளும், விறகும் மூன்றுகால் அடுப்பும் இல்லையே என்ற ஒரு ஆதங்கம் சட்டென்று மனதில் வந்தது.
இரண்டு மணித்தியாலங்களும் இருண்ட வீட்டுக்குள், இயங்காத பொருட்களுடன் என்ன செய்வது?
வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். மெல்லிய குளிர்ந்த காற்றும், சூரியனின் ஒளியும் என்னை இதமாகத் தழுவின.
இயற்கை அழகானது.