புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை.
நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. நான்கு வருடங்களின் முன் வந்திருந்தாய். பார்த்துப் பேசும் பாக்கியம்தான் எனக்கில்லாமற் போய் விட்டது. பார்க்காமலே இருந்து விடுவோம் என்றாய். பால்ய காலத்து முகங்களையே மனங்களில் வார்த்திருப்போம் என்றாய்.
இன்றைக்கு ஏன் இதெல்லாம் என் நினைவில் வருகின்றது என்றே எனக்குத் தெரியவில்லை. இரவின் நிசப்தங்களைக் குலைக்கும் ஒவ்வொரு சப்தங்களும் எனக்குக் கேட்கின்றன. ஆழ்ந்து உறங்கிப் போகும் நான் ஏன் இப்படி அர்த்த ராத்தரியில் அர்த்தமற்று விழித்திருக்கிறேன் என்று புரியவில்லை. மனசு குழம்புகிறது. எதையோ இழந்தது போலத் தவிக்கிறது.
´எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ..?´ இருட்டுக்குள் நடந்து வரும் போது தூரத்தே தெரியும் வேப்பமரத்தில் ´பேயிருக்குமோ!´ என்ற நினைவு வந்தவுடன் குடல் தெறிக்க ஓடும் சின்னபபிள்ளை போலக் கேள்வி தோன்றிய மாத்திரத்தில் மனசு சில்லிடுகிறது. ´வேண்டாம் எந்த அசம்பாவிதங்களும் வேண்டாம். இதற்கு மேல் யாரையும் இழக்கவோ, யாரும் எதையாவது இழந்து விட்டார்கள் என்று கேட்கவோ இந்த மனசுக்குத் திராணியில்லை.´ நினைவுகளிலிருந்து விலகி ஓடுகிறேன். வேப்பமரத்துக்குப் பயந்து ஓட, வளைவில் தெரியும் முடக்குக் காணிக்குள் விருட்சமாய் விரிந்திருக்கும் புளியம்மரம் மீண்டும் பேயை நினைவு படுத்துவது போல் எனக்குள்ளும் வேண்டாத நினைவுகள் வந்து என்னைப் பயமுறுத்துகின்றன. குடல் தெறிக்க ஓடுகிறேன்.
´இல்லை, யாருக்கும் ஒன்று நடந்து விடாது. எனக்கு நித்திரை வராததற்கான காரணம் வேறாக இருக்க வேண்டும்.´ “இரவிலே உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல" என்று ராகினி பலதடவைகள் சொல்லியிருக்கிறாள். இருந்தும் வேலை முடிந்த பின் ரெட்மில்லரில் 45நிமிடங்கள் ஓடிவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன். அதனால்தான் நித்திரை கொள்ள முடியவில்லைப் போலும்.
ம்.. மீண்டும் ஏன் நீ என் நினைவுகளில் வருகிறாய். மனத்திரையில் வலம் வரும் (நடமாடும்) பலநூறு முகங்களுக்கு இடையில் நீ கொஞ்சம் அதிகமாகவே வருகிறாய். அடிக்கடி வருகிறாய். உன்னைப் பார்க்க வேண்டும் போல மனதுள் ஆவல் எழுகிறது.
ஏனோ மனதில் குழப்பம். சில நாட்களாகவே இது தொடர்ந்தது. ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ என்பதில் திடமில்லை. ஆனால் என்னவென்று புரியாத உணர்த்தல்கள். அடிக்கடி விழிப்பு. படுத்ததும் தூங்கி விடும் என் இயல்பு நிலையில் இருந்து விலகியிருந்தேன். ஏதோ ஒரு யோசனை. ஏன் இந்த உணர்வுகள் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்தாலும் ஐரோப்பிய அவசரங்களினூடு என் நாட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன.
ஏதோ ஒரு உந்துதலில் உனது மகளுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். உனதும், உன் மனைவியினதும் புகைப்படம் ஒன்று எனக்கு அனுப்பும் படி. அவள் பதிலுக்காக என் மனம் காத்திருந்தது.
எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? நினைக்கும் போதே வாயில் வைக்கக் கொண்டு போன உணவு நழுவி விழுந்து விட்டது. என் மேல் பிரியமான யாருக்காவது...? கேள்விகள் தோன்றுவதும் வழமை போலவே எனக்குள்ளேயே அமுங்கிப் போவதுமாய் நாட்கள் தொடர்ந்தன.
நினைவுகளில் அவ்வப்போது வரும் பலரில் நீயும் வந்து கொண்டே இருக்கிறாய். இந்த நாட்களில் உன்னை இன்னும் அதிகமாக நினைத்தேன் போல இருக்கிறது. ஏனோ உன்னைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனங்களின் தொடுகைகளைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாத தூரத்தில் நீ. உறவினன் என்பதையும் தாண்டிய ஏதோ ஒரு பிரியம் உன் மேல். எனக்கு உன் மேல் இருக்கும் பிரியத்தை விட உனக்கு என் மேல் இருக்கும் பிரியம் அதிகம் என்பதை நான்கு வருடங்களின் முன் நீ ஜேர்மனி வந்த போது தொலைபேசியில பேசிய போதுதான் உணர்ந்தேன். அப்போதும் கூட நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. தொலைபேசி என்ற ஒரு சாதனம் இருந்ததால் பேசிக் கொண்டோம்.
ஏன்னமாய் பேசினாய். ஏனக்கு அதை மறக்க முடிவதில்லை.
எனது 18வயதுககுப் பிறகு அவனைச் சந்தித்துக் கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. எனது அந்த வயது முகத்தைத்தான் அவனுக்குத் தெரியும். அதே போல அவனது அந்த வயது முகத்தைத்தான் எனக்கும் தெரியும்.
நேற்று வேலையில் இருந்து வேளைக்கே வீட்டுக்கு வந்து விட வேண்டும் போல இருந்தது. வந்து விட்டேன். அப்போதுதான் அந்த செய்தி
என்னை வந்தடைந்தது. நீதான்; ஒரு மருத்துவமனையில் மரணத்தின் வாசலில இருக்கிறாய்; என்று. தொலைபேசியினூடு உன் உறவுகளோடுதான் பேச முடிந்தது