உடல் சிதற முன்னமே மனம் சிதறிய
கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்
உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட
கிருசாந்தியின் மரணச் செய்தியிலும்…
இன்னும் இவை போலவே
வெளியுலகத்துக்குத் தெரிந்தும்
தெரியாமலும்
மனம் கருகியும் உடல் சிதறியும்
சிதை பட்டுப் போன சகோதரிகளின்
வந்ததும் வராது போனதுமான
மரணச் செய்திகளிலும்...
வந்த வேதனையையும் கோபத்தையும் விட
அதிக கோபம் வருகிறது
இன்றைய சிலரின் பேனா முனைகளில்
அந்த சகோதரிகளின்
அங்கங்கள் சிதையும் போது
கவிதைகளுக்கும் விவாதங்களுக்கும்
அவர்களின் அங்கங்கள்தான் கிடைத்தனவா?
மனசு தகிக்கின்றது
எங்கள் சகோதரிகளின் மூச்சை நிறுத்திய
இராணுவங்களின் துப்பாக்கிகளை விட
இவர்கள் பேனா முனைகள் கொடியன
எங்கள் தேசக்காற்றை மாசு படுத்திய
எக்காளங்களை விட
இவர்களின் சிந்தனைகளில் ஊற்றெடுக்கும்
எழுத்துக்கள் குரூரமானவை.
11.3.2007