Monday, March 17, 2008

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி

கோணேஸ்வரி அவளது பெண்ணுறுப்பில் குண்டு வைத்துச் சிதறடிக்கப்பட்ட போது கலாவின் மன அதிர்வில் சிதறிய வார்த்தைகள் கோர்வைகளாகி ஒரு கவிதையானது.

அந்தக் கவிதை பலரிடமும் பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியது.

போர் இப்படிப் பலவிதமான பெண்கள் மீதான வன்முறைகளை ´போரியலில் இது சகயம்´ என்ற சால்யாப்புடன் (தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே நோக்கமாக இருந்தாலும், அதுவும் ´போரியலில் இது சகயம்´ என்ற பேச்சுக்குள்ளேயே அடங்கி விடுகிறது) உலகம் பூராவும் நடத்தினாலும், அது எமது நாட்டில், எமது சகோதரி ஒருவரின் மீது நிகழ்த்தப் பட்ட போது நாம் ஒவ்வொருவரும் அதிர்ந்துதான் போனோம்.

(கோணேஸ்வரிக்கு நடந்ததை வேறு எந்தப் போராட்ட வரலாற்றிலும் நடந்து முடிந்ததாக நான் அறியவில்லை. அத்தனை கொடுமையான, போரின் உக்கிரத்தைத் தாங்க மாட்டாதவர்களின் வக்கிரமான செயற்பாடு அது)

இந்த அதிர்வுகள், மன்னம்பேரி.... கிருஷாந்தி... என்று ஒவ்வொரு பெண்ணின் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட செய்திகள் வந்து எமது செவிப்பறைகளை அறைந்த போது தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுக் கொண்டேதான் இருந்தன.

ஆனால் கலாவின் கவிதை இத்தகைய அதிர்விலிருந்து வேறுபட்ட அதிர்வுகளையும் பலர் மனதில் ஏற்படுத்தி விட்டுச் சென்றது.

வெறும் வசைச் சொற்களாக மட்டுமே, குறிப்பாக எமது ஆண்களால் (சில பெண்களாலும்) பாவிக்கப் பட்ட பெண் உறுப்புகளின் பெயர்களில் ஒன்று கலாவின் கவிதையில் வந்த போது அது எம்மவரிடையே அதிர்வை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. கலா பாவித்த சொல் பொதுவாக வசைச் சொல்லாகப் பாவிக்கப் படுவதில்லை. அது மரியாதையான முறையில் Biologyயிலும், சங்க இலக்கியங்களிலும் பாவிக்கப் பட்டுள்ளது.

அந்தச் சொற்களைப் பாவித்துத்தான் கவிதை எழுத வேண்டுமா, என்ற கேள்வியை ஒரு புறம் வைத்து விடுவோம். எதை எழுதுவது, எதை எழுதக் கூடாது என்ற வரையறைகளை எவருக்கேனும் வகுக்க எமக்கென்ன உரிமை இருக்கிறது. அது அவரவர் சுதந்திரம்.

யாரோ ஒரு பெரியவர் சொன்னார் "எந்த ஒரு அழகற்ற விடயத்தையும் அழகாக எழுதுவதே எழுத்தாளருக்கு அழகு" என்று. இங்கு எது அழகு, எது அழகில்லை என்பதைத் தீர்மானிக்க வேண்டியது எழுத்தாளரது பொறுப்பு.

மீண்டும் நான் கலாவின் கவிதைக்கு வருகிறேன்.

அந்தக் கவிதையின் தொனியும், பொருளும் ஒரு பெண்ணுக்கு, அதுவும் எங்கள் நாட்டுப் பெண்ணுக்கு நடந்து விட்ட ஒரு கொடுமையின் அதிர்வில் இன்னொரு பெண்ணின், மனதில் இருந்து சிதறிய வார்த்தைகளினால் பின்னப் பட்டவை. எந்த வித விரசத்தையும் மனதில் கொள்ளாது, விமர்ச்சனங்கள் பற்றிய எந்த அக்கறையும் கொள்ளாது... இன்னும் பல எதிர்வுகள் வரலாம் என்ற யதார்த்தத்தைக் கூடச் சிந்தியாது கோர்க்கப்பட்ட வார்த்தைகள் அவை.

அந்தக் கவிதை ஏற்படுத்திய அதிர்வும், (இந்த அதிர்வுகளுக்கான காரணங்கள் பல்வேறு கோணத்திலானவை) அதற்குக் கிடைத்த பிரபல்யமும் தொடர்ந்தும் பலரையும் வில்லங்கமாகத் தமது கதைகளிலும், கவிதைகளிலும் இச்சொற்களைப் பாவிக்க வைத்தன. சில இந்தியத் திரைப்படங்களில் கதைக்குப் பொருத்தமில்லாது, தேவையில்லாது இலங்கைப் பிரச்சனைகள் எங்காவது புகுத்தப் பட்டிருக்கும். யாரோ ஒருவர் ஏதோ ஒரு சிறு பிரச்சனைக்காய் கழுத்தில் சயனைட் கொழுவியிருப்பார். இப்படியான தன்மையுடையதாகத்தான் தேவையில்லாமல் இச்சொற்களைச் சேர்த்துக் கொண்ட, இன்னும் சேர்த்துக் கொண்டிருக்கின்ற… பலரது படைப்புகள் தோற்றமளிக்கின்றன.

இவைகளின் மத்தியில் எத்தனையோ பேரின் கதைகளும், கவிதைகளும் அவசியம் கருதியும் (சில சமயங்களில் அவசியமே இல்லாதும்) இச் சொற்கள் சேர்த்துப் புனையப் படுகின்றன. அவை பேசு பொருளாகவும், விவாதத்தின் கருவாகவும் பரிணமிக்கின்றன. அதை எழுதியவர்களில் சிலர் பிரபல்யமான எழுத்தாளர்களாகக் கூட ஆகி விடுகிறார்கள்.

அதைப் பார்த்து, அந்தப் பிரபல்யத்துக்கு ஆசைப்பட்டு தேவையோ, தேவையில்லையோ என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்னும் இன்னும் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுதட்டும். நன்றாக எழுதட்டும். நாம் யார் அவர்களின் சிந்தனைகளின் ஊற்றெடுப்புகளைத் தடுக்க…! எந்தெந்தச் சொற்களைப் பாவிக்க வேண்டும் என்று வரையறைகளை விதிக்க…!

அதற்காக எங்கள் சகோதரிகளை பகடைக்காய்கள் ஆக்குவதை விட்டு விடுங்கள். ஒவ்வொரு பொழுதிலும் நாம் சிந்தியது வெறும் கண்ணீரல்ல.

சந்திரவதனா
17.3.2007