கடந்த வாரத்தில் ஒரு நாள் எமது நகரில் வாழும் ஒருவர் இரவு 9.30 மணியளவில் எமது வீட்டுக்கு வந்தார்.எந்தவித முன்னறிவித்தலுமின்றி அவர் அப்படி வந்ததில் எமக்குள் ஆச்சரியமும் ஏன் என்ற கேள்விக் குறியும்.
கூடவே இரண்டு பூப்புனிதநீராட்டு விழா அழைப்பிதழ்களையும் கொண்டு வந்திருந்தார். வாரஇறுதியில் தானும் இன்னும் இருவருமாக எமது வீட்டைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாமற் போய் விட்டது எனவும், எப்படியோ கஸ்டப் பட்டு இப்போ கண்டு பிடித்து விட்டதாகவும் சொல்லி அந்த அழைப்பிதழ்களை எம்மிடம் தந்தார்.
அவைகளில் ஒன்று எமது நகரிலேயே வாழும் ஒரு குடும்பத்துப் பெண்ணுடையது. மற்றையது வேறொரு நகரத்தது. அந்தக் குடும்பத் தலைவர் யாரென்று எமக்குத் தெரியவில்லை. கொண்டு வந்தவரும் இப்போதுதான் முதல்முதலாக அந்த நபரைச் சந்தித்தாராம்.
அவர் போன பின்னும் நானும் கணவருமாக நன்கு யோசித்துப் பார்த்தோம். அந்தப் பெயரில் சொந்தமோ, நட்போ எமக்கு ஊரில் கூட இல்லை. ஜேர்மனியில் நிட்சயமாக இல்லை.
வழமையான பூப்புனிதநீராட்டு விழா வாழ்த்து மடல்கள் போலவே இதையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு படுத்து விட்டோம். தொடர்ந்த நாட்களில் ´யாரது? என்ற கேள்வி´ அவ்வப்போது வந்தாலும் அதிக ஆராய்ச்சிகள் செய்யாமல் அதை விட்டு விட்டோம்.
நேற்று வேலை முடிந்து வரும் போது எமது நகரத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணை பேரூந்தினுள் சந்தித்தேன். கதைகளின் மத்தியில் "ஏன் சாமத்திய வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டாள் அந்தப் பெண். நானும் சட்டென்று எதுவும் ஞாபகத்துக்கு வராத நிலையில் "எந்தச் சாமத்திய வீடு?" என்றேன். அதுதான்... என்று தொடங்கி குறிப்பிட்ட அந்த நபரின் பெயரைப் சொல்லி அவரது மகளின் சாமத்திய வீட்டுக்குத்தான் என்றாள்.
"ஆரது, உங்களுக்குத் தெரிந்தவரா?" கேட்டேன்..
"சீ.. சீ.. தெரியாது. சரியிலைத்தானே பாவம் கொண்டு வந்து தந்திட்டார். அதுதான் நாங்கள் போயிட்டு வந்தனாங்கள்." என்றாள்
அதாவது இந்த நகரில் உள்ள அனேகமான தமிழர் எல்லோரும் குறிப்பிட்ட அந்த நகருக்குச் சென்று சாமத்திய வீட்டில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். எமது நகரில் வாழும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் அவரோடோ அந்தக் குடும்பத்தோடோ முற்கூட்டிய பழக்கமும் இல்லை. நட்பும் இல்லை.