Saturday, July 10, 2010

விபத்து

யாருக்குத் தெரியும் ஒரு வெள்ளிக்கிழமை திடீரென நான் ஒரு மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்பேன் என்று. எனக்கும் தெரியாது. ஆனால் நடந்து விட்டது. நான் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறேன். அடிக்கடி வந்து நான் சரியாக இருக்கிறேனா எனப் பார்த்துப் போகிறார்கள் மருத்துவத்தாதிகள்.

வழமையான வெள்ளிக்கிழமைகள் போலத்தான் நேற்றைய வெள்ளியும் விடிந்தது. மாலை வரை சாதாரணமாகவே இருந்தது. வெயிலின் அகோரம் தணிந்து,, வியர்வைப் பிசுபிசுப்பும் குறையட்டுமே என்று குளிக்கச் சென்ற போதுதான் அது நடந்தது. சவரைத் திறந்து விட்டு சற்றுத் திரும்பிய போது குளிக்கும் பேசினுக்குள் எப்படி வழுக்கியது என்றே தெரியவில்லை. ஒரு செக்கன் கூட தேவைப்பட்டிருக்காது சுழன்று விழுந்த போது ஒரு பக்கத்தில் கூரான விளிம்புடன் இருந்த கட்டோடு தலை படாரென அடிபட்டது வரைதான் எனக்குத் தெரிந்தது. சில நிமிடங்களுக்கு கோமா நிலைக்குப் போய் விட்டேன்.

இன்னும் வாழ வேண்டும் என்ற நியதி போலும். எவ்வளவு நேரம் என்பது சரியாகத் தெரியவில்லை. எழுந்து விட்டேன். நடந்த போது தள்ளாடியது. தலைசுற்றியது. எனது வழமையான பழக்கப்படி அன்றும் தொலைபேசியை குளியல் அறையில் வைத்து விட்டே குளிக்கத் தொடங்கியிருந்ததால் மகனை அழைக்க முடிந்தது.

அம்புலன்ஸ், மருத்துவமனை என்ற அளவுக்கு என் நிலை போய் விட்டது. ஒன்றும் பயமில்லை. எல்லாம் ஓகே என்று இப்போது நம்பிக்கை தந்து விட்டார்கள் என்றாலும் தலையில் அடிபட்டதாலும், கோமா நிலை வரை சில நிமிடங்களுக்குச் சென்றிருந்ததாலும் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.