Tuesday, March 22, 2011

சங்கடங்கள்

வர வர Privacy என்பது கிடைக்காமலே போய் விடுகிறது. எங்கு சென்றாலும் தெரிந்தவர்கள்.

பிள்ளகைளுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்கள், பார்ப்பவர்கள், எனக்குத் தெரிந்தவர்கள் என்று எங்கும் நிறைந்திருக்கிறார்கள்... அந்தத் தெரிந்தவர்கள்.

சில வாரங்களுக்கு முன், சற்று ஆறுதலாக இருந்து கதைப்போமே என்று நண்பியுடன் ஒரு சிற்றுண்டிச்சாலையில் சென்றமர்ந்தேன். இரண்டு கதைதான் கதைத்துச் சிரித்திருப்போம். அதற்கிடையில் எனது மேலதிகாரி, தனது உப அதிகாரிகள் இருவருடன் வந்து “ஹலோ“ சொல்லி விட்டு எமக்குப் பின்னால் இருக்கும் மேசையில் அமர்ந்து கொண்டார். அதற்குப் பின் சற்று உரத்துக் கூடக் கதைக்க முடியவில்லை. மனம் விட்டுச் சிரிப்பதெங்கே!

வரி இலாகாவில் கொஞ்சம் பொய் எழுதினால்தான் வருடம் முழுவதும் கட்டியவரியின் ஒரு கணிசமான பங்கையேனும் திருப்பிப் பெறமுடியும். கடந்த வாரம் அப்படித்தான் பத்திரங்களை நிரப்பிக் கொண்டு வரி இலாகாவுக்குச் சென்றேன். நிறையப் பேர் காத்திருந்தார்கள். நானும் காத்திருந்து எனது முறை வர உரிய அதிகாரியிடம் சென்று பத்திரங்களை ஒப்பித்தேன். சில கேள்விகளின் பின் “நீங்கள் துமியின் அம்மாதானே..!“ என்றார். நான் ஆச்சரியத்துடன், நீங்கள்.. என்ற போது, “நான் துமியின் கைப்பந்தாட்ட ரெயினர்“ என்றார். மிக நட்பாக அவர் என்னோடு கதைத்து, பத்திரங்களைச் சரிபார்த்தாலும் என்னுள்ளே சங்கட உணர்வு.

உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றால், வழமையாக அங்கு வருபவர்கள் ஒரு ´ஹலோ` வோடோ அன்றி அது கூட இல்லாத IPhone னோடோ ஐக்கியமான படி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். எந்தத் தொந்தரவும் இருக்காது. இப்போது அந்த சுதந்திரம் கூட இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எனது குடும்பமருத்துவர் எனக்குப் பின்னால் நின்று சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தார். நேற்று பின்னால் குடும்ப வைத்தியர். பக்கத்தில் எனது பகுதிநேர வேலை மேலதிகாரி.

சனிக்கிழமைகளில்தான் எனது கணவருடன் Shopping, அது.. இது.. என்று வெளியில் சுற்றுவேன். ஒவ்வொரு முறையும் சிலர் என்னைப் பிடித்து விடுவார்கள். “ஹாய் சந்திரா..! எப்படி இருக்கிறாய்? கண்டு கனகாலம்.. போன்ற பாணிகளில் அவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் முறித்துக் கொண்டு போக வேண்டியிருக்கும். அல்லது எனது கணவரின் முறைப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.