Wednesday, July 23, 2014

100,000€ க்கள்

இன்று தற்செயலாக  எனது ஜேர்மனிய நண்பி லியானே யைச் சந்தித்தேன். கடந்த வருடம் எழுதிய அவள் பற்றிய ஒரு குறிப்பு இது.

லியானே மிகவும் மனமுடைந்து போயிருந்தாள். அவளது கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது.

அவன் முன்னரும் சில தடவைகள் வேறு வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் வெறும் சந்தேகங்களுடனும், சண்டைகளுடனும் முடிந்து முடிந்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஆதாரபூர்வமான சில தடயங்கள்  சாட்சியங்களாக, அவள் தாங்கொணாத் துயரில் தவித்தாள்.

மூன்று குழந்தைகளின் தேவைகள், வேலைகள் போன்றவற்றிற்கு மத்தியில் மனஆறுதலுக்கு நண்பிகள் சிலருடன் பேசினாள். விடயங்களைச் சொன்னாள். அப்படியெதுவுமில்லை அவன் தன்னிடமே திரும்பி விடுவான் என்று அடிக்கடி நம்பினாள்.

ஆனால் அவனோ ஒரு நாள், அவள் சமைத்து வைத்த சாப்பாட்டைச் சாப்பிட்ட படியே 'உன் மீது எனக்கு நாட்டமில்லை. உனக்கு 45 வயதாகி விட்டது. இப்போது ஒரு 30வயதுப் பெண்ணை நான் காதலிக்கிறேன். அவளோடு போய் வாழப்போகிறேன்' என்றான்.

லியானே ஒரு கணம் ஆடிப் போய் விட்டாள். 25வருடகாலத் தாம்பத்தியம் ஒரு நொடியில் கலைந்து போகப்போவதை உணர்ந்தாள்.

ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் அவளை விட்டுப் போய் விட்டான்.

அவள் கலங்கினாள். அழுதாள். என்ன செய்வதென்று தெரியாது விட்டேற்றியாகத் திரிந்தாள். எல்லாம் சில வாரங்கள்தான்.

அதன் பின் „அவன் திரும்பி வருவான் என்று நம்புகிறாயா?“ என்று கேட்ட போது „வந்தாலும் அவனை ஏற்கவோ அவனுடன் சேர்ந்து  இனி வாழவோ தயாரில்லை“  என்று திடமாகச் சொன்னாள். தனக்கான, தனது மனதுக்குப் பொருத்தமான இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்தாள்.

விவாகரத்து, வீடுவிற்றல்... போன்ற சட்டப்படியான சில செயற்பாடுகளுக்கு மத்தியில் ஒரு சில மாதங்களிலேயே அவளுக்கு ஒரு புதிய நட்புக் கிடைத்தது. அவள் மெது மெதுவாகச் சந்தோசமானாள். துயரம் குடி கொண்டிருந்த அவள் முகம் மகிழ்வில் திளைக்கத் தொடங்கியது.

அந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. லியானே அவளது கணவனுடன் வாழந்த காலங்களில் பணவிடயத்தில் கூட மிகுந்த கஸ்டப் பட்டாள். அவன் அவளை விட்டுப் போன சில மாதங்களுக்குள் அவள் பணக்காரியாகி விட்டாள். அவ்வப்போது லொத்தர் போடும் அவளுக்கு  அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, 100,000€ க்கள் விழுந்தன.  

50வயதுக் கணவன் 30வயதுப் பெண்ணுடன் வாழ முடியாமல் மீண்டும் ஓடி வந்தான். லியானே அவனை ஏற்கவில்லை.

சந்திரவதனா
7.3.2013