Wednesday, January 28, 2015
Radio Veritas
வயதுகள் எத்தனை ஆனால் என்ன! பரிசுகளும், பாராட்டுகளும், விருதுகளும், வாழ்த்துகளும் ஒவ்வொரு மனிதரையும் குழந்தைகளாக்கி விடுகின்றன. அப்படி நான் குழந்தையாகிய பொழுதுகள் நிறையவே இருக்கின்றன. வெரித்தாஸ் வானொலியோடு நான் ஐக்கியமாகியிருந்த பொழுதுகளில் கிடைத்த பரிசுப்பொருட்க ளில் ஒரு பொருள் கூட இப்போது என்னிடம் இல்லை. 1983 இல் கிடைத்த இந்த ஒரேயொரு Certificateமட்டும் நினைவாக இருக்கிறது. ஏதோ ஒரு போட்டிக்குக் கிடைத்தது. போட்டி எதுவானாலும் கிடைத்ததையிட்டு அப்போது நான் மகிழ்ந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
Monday, January 26, 2015
சில சமயங்களில் சந்தோசம் வாசலிலேயே காத்திருக்கும்.
நேற்று வெளியில் போவதற்காகக் கதவைத் திறந்த போது வாசலில் ஒரு சிறிய பார்சல் எனக்காகக் காத்திருந்தது. வீட்டில்தான் நின்றேன். அழைப்புமணியின் சத்தம் கேட்கவில்யே என்ற யோசனை ஒரு புறம். எந்தப் பொருளையும் Order பண்ணவில்லையே! யார் அனுப்பியிருப்பார்கள் என்ற யோசனை மறுபுறம்.
கருணாகரமூர்த்திதான் அந்தப் பார்சலை அனுப்பியிருக்கிறார் என்று தெரிந்த போது மனதுள் இனம் புரியாத சந்தோசம். கண்டிப்பாக புத்தகங்கள் தான் அதற்குள் இருக்கும்.
கருணாகரமூர்த்தி தான் வெளியிட்ட, வெளியிடும் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அவ்வப்போது எனக்கு அனுப்பி வைத்து விடுவார். அவரது எல்லாப் புத்தகங்களுமே என்னிடம் உள்ளன என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்புத்தகங்களையே காண்பது அரிது என்ற நிலை இருந்த காலத்தில் கிடைத்த `கூடு கலைதல்´ நான் விரும்பி , ரசித்து வாசித்த புத்தகங்களில் ஒன்று.
இத்தனைக்கும், நாமிருவரும் ஜெர்மனியில்தான் வாழ்கிறோம் என்றாலும் இதுவரையில் நாம் ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை. அவ்வப்போதான மின்னஞ்சல்கள் , ஏதோ ஓரிரு தடவைகளிலான தொலைபேசி அழைப்புகள்… இவைகள்தான் எமக்கிடையேயான உறவுப்பாலம்.
2013 இல் எனக்கு அவரிடம் இருந்து ஒரு உதவி தேவைப்பட்டது.
எமது நெருங்கிய உறவுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து பேர்லினுக்கு ஒரு Conference க்காக வருவதாகவும், அது முடிய எம்மிடம் வருவதாகவும் ஏற்பாடாகியிருந்தது. Conference முடிய பேர்லினில் சில முக்கிய இடங்களைப் பார்க்க விரும்புவதாகவும், எனது நண்பர்கள் யாராவது அங்கிருந்தால் அறிமுகப்படுத்தி விட்டால் உதவியாக இருக்கும் என்றும் கேட்டார்கள்.
பேர்லின் என்றதும் கருணாகரமூர்த்திதான் நினைவில் வந்தாலும், உதவி என்று கேட்பதில் எனக்கு நிறையவே தயக்கம் இருந்தது. பலமுறை யோசித்து, வேறுவழி ஏதாவது இருக்கிறதா எனத் தேடி ஒன்றுமே சரிவராது என்ற நிலையில் கருணாகரமூர்த்தியையே நாடினேன். மிகுந்த தயக்கத்துடன்தான் மின்னஞ்சல் எழுதினேன்.
ஒருவித பிகுவுமின்றி உடன் பதில் வந்தது. தன்னாலான எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருந்தார். மனதுள் மகிழ்வும், நன்றியும்தான் இருந்தது.
எமது உறவினர் பேர்லினிலிருந்து எம்மிடம் வரும் போது அவர்களும் கருணாகரமூர்த்தியும் நண்பர்களாகுமளவுக்கு அவர்கள் ஐக்கியமாகியிருந்தார்கள். எல்லாமே சந்தோசமாகத்தான் இருந்தது.
அவர்கள் மீண்டும் அவுஸ்திரேலியா பயணமாகும் அன்று அதிகாலையில் கருணாகரமூர்த்தியின் தொலைபேசி அழைப்பு. அவர்களைப் பயணம் அனுப்பத்தான் அழைக்கிறார் என நினைத்தேன்.
ஆனால் அவர் கேட்டதோ என்னிடமுள்ள அவரது பெர்லின் நினைவுகள் நூலை அந்த உறவினர்களுக்கு கொடுத்து விடும்படி.
புத்தகங்களை இரவல் கொடுப்பதே என்னால் முடியாத காரியம். புத்தகத்தையே கொடுத்து விடு என்ற போது கவலையாகத்தான் இருந்தது. ஆனா லும் தந்தவரே கொடுத்து விடு என்னும் போது என்னால் மறுக்க முடியில்லை. நேற்று வரை, அவ்வப்போதான பொழுதுகளில் போய் விட்ட புத்தகம் என் நினைவுகளில் நெருடலாய் வந்து போகும்.
இனி வராது என்று நினைக்கிறேன். போனது கருணாகரமூர்த்தியின் முதல் தொகுப்பான சிறிய `பெர்லின் நினைவுகள்´. இப்போது வந்திருப்பது காலச்சுவடு வெளியீடான பெரிய` பெர்லின் நினைவுகள்´ . கூடவே அனந்தியின் டயறியும்.
மிக்க நன்றி கருணாகரமூர்த்திக்கு!
சந்திரவதனா
25.01.2015
Tuesday, January 13, 2015
மறதி
இப்போதெல்லாம்
முன்னரைப் போல என்னால் யாருக்குமே உடன் பதில் எழுத முடிவதில்லை.
நேரத்தையும் விட எனது மறதிதான் அதற்கான முக்கியமான காரணம்.
நேரத்தையும் விட எனது மறதிதான் அதற்கான முக்கியமான காரணம்.