Friday, April 24, 2015

நானும் அவர்களும்

நான்
யாருடன் பேசலாம்
யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவர்களேதான் தீர்மானிக்கிறார்கள்!

தாம்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறார்கள் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனையைச் சற்றும் தளர்த்தாமல்!
சந்திரவதனா
2015

Friday, April 17, 2015

பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா ?

என்ன ஒற்றுமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மாதொருபாகன் நாவலில் பூவரசு முக்கியப்படுத்தப் பட்டிருந்தது. அந்நாவலை வாசிக்கும் பொழுது எனக்குள் எழுந்த கேள்விகளில் பூவரசு பற்றிய கேள்வியும் பெரிதாக இருந்தது.

பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று யோசித்த போது பரியாரிமார் மருந்தைக் கொடுத்து சுத்தமான பூவரசம் இலையில் தேனுடன் குழைத்து சாப்பிடும் படி சொல்லுவது ஞாபகத்தில் வந்தது. அடுத்தடுத்து ஞாபகத்தில் வந்தவை இலைகளைச் சுற்றி பீப்பீ ஊதினோம். குழைகளை ஆட்டுக்கு உணவாக்கினோம்.

பூவரசம் கதியால்களும், மரங்களும் இல்லாத வீடுகள் எமது ஊரில் இல்லையேன்றே சொல்லலாம். மதில் வீடுகளில் கூட கிணற்றடியைச் சுற்றியாவது பூவரசு நட்டிருப்பார்கள். அம்மரங்களிலிருந்து இடையிடையே நூல் விட்டு இறங்கும் மசுக்குட்டிகள் (மயிர்க்கொட்டிகள்) கூட வாசிப்பின் போது பலதடவைகள் மசமசப்பையும், பயத்தையும் தந்தன.

இப்போது அடுத்த நாவலிலும் அதே பூவரசு சிலாகிக்கப் படுகிறது.
சுள்ளிடும் வெயிலைத் தடுக்க குடை விரித்திருக்கும் பூவரசமர இலைகள். அதன் கீழிருந்து... என்றும், பூவரசம் பூவில் அழகில்லை, மணமில்லை, அளகத்தில் சூட உதவுவதில்லை...
 என்றும் தொடர்கிறது எஸ்போவின் ´தீ`.

Sunday, April 12, 2015

மாதொருபாகன்


ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கும் போது பெரும்பாலும் சற்று இழுநிலை இருக்கும். சற்றுத்தூரம் போய்விட்டால் நிறுத்த மனம் வராது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் வாசிக்கத் தொடங்கிய போதும் அப்படியானதொரு நிலை இருந்தது. அதனோடு ஒன்றி விட்ட பின் வாசிக்க நேரம் தேடி மனம் அலைந்த பொழுதுகளும் இருந்தன.

இப்போது வாசித்து முடித்து நாட்களாகி விட்டன. அதன் பின் எத்தனையோ சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று வாசித்து விட்டேன். ஆனாலும் இன்னும் அந்தக் கதை மாந்தர்களான பொன்னாவும், காளியும் என்னருகிலேயே வாழ்வது போன்றதொரு பிரமையிலிருந்து மீளமுடியவில்லை.

தொண்டுப்பட்டியும், குடைவிரித்து விருச்சமாக விரிந்திருக்கும் பூவரசுவும், திருச்செங்கோடும்... என்று மனசுக்குள் கனவும், நினைவுமான கற்பனை தோய்ந்த ஒரு நிலை. கதை நடந்த அந்தப் பூமிக்கே போய் வந்தது போன்றதொரு உணர்வு.

எத்தனையோ புதியசொற்கள். பொருளே புரியாமல் முதலில் தடுமாறி பின் புரிந்து கொண்ட இடங்கள். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாத பல கேள்விகள்.

அடுத்தொரு நாவலைத் தொடும் வரை மனசு இதிலிருந்து விடுபடுமா எனத் தெரியவில்லை.