Monday, October 26, 2015

ஞானம் 175 - ஈழத்து புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில்

சந்தோசங்கள் எதிர்பாராமல் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. நான் 1999 இல் எழுதி சக்தி இதழில் பிரசுரமான சிறுகதை ஒன்று எனக்குத் தெரியாமலே ஞானம் 175 - ஈழத்து புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் பிரசுரமான போது வராத சந்தோசத்தை நேற்று அர்த்த ஜாமத்தில் ஒரு செய்தியாக வந்த இந்தப் படம் தந்தது. அன்போடு அனுப்பி வைத்த மயூரனுக்கு (Inuvaijur Mayuran) மிக்க நன்றி.

Friday, October 16, 2015

Thumilan´s Wedding on 07.08.2015

07.08.2015

ஹோமம் வளர்த்து, அக்னி சாட்சியாய், மேள தாளம், நாதஸ்வரத்துடன் மாலைமாற்றி ஒரு சம்பிரதாயக் கல்யாணம். அம்மாவுடன் மகன் துமிலனும், மருமகள் செலினாவும்.

அம்மாவின் உடல் நிலையில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்து வந்து, ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ந்து கல்யாணமண்டபத்தில் அம்மாவால் இருக்க முடியுமா என்ற கேள்வியும்இ பயமும் எங்கள் எல்லோரிடமும் இருந்தது. அம்மாவிடம் ஒரு தயக்கமும் இருந்தது. ஆனாலும் அம்மா வந்து கல்யாணத்தைக் கண்டு களித்து, எம்முடன் ஒன்றாக இருந்து, விருந்துண்டு மீண்டும் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் சென்றா. அந்த ஐந்து மணித்தியாலங்களும் அம்மா அங்கு எங்களுடன் கூடி நின்றது பெரும் சந்தோசம்.

Wednesday, October 14, 2015

செல்வா




தலைவர் பிரபாகரனை முதல்முறை(30.05 2002 ) சந்தித்த பொழுது, “பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த ஒரு பெண்ணை நவம் அறிவுக்கூடம் போயும் சந்திக்க முடியாது போய் விட்டது என்று ஆதங்கப் பட்டேன்.

„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா” என்றார்.

„அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக்கோ?“ கேட்டேன்.

„இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்” என்றார்.

அவர் சொன்ன படி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா அங்கே நின்றாள்.

என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாக இருந்தது.

சந்திரவதனா
12.10.2015