Wednesday, July 01, 2015

பெருவிரல்

என்ன நடக்கிறது என்று சிந்திக்க முன்னமே அது நடந்து விட்டிருந்தது. அடித்துச் சாத்திய கதவின் ஓசையா, வலி பற்றிய மூளைக்கான அறிவிப்பா முந்திக் கொண்டதெனத் தெரியவில்லை. திரும்பிய போதுதான் தெரிந்தது பொறியில் மாட்டிய எலியாய் நான் நிற்பது.

எப்படி நடந்தது? எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தன. வழமையைப் போல மீண்டும் ஒரு கணத்தில் கவனத்தை எங்கோ சிதற விட்டு விட்டேனே!

அழக் கூட முடியவில்லை. வலி என்னை இனியில்லை என்றளவுக்கு வருத்தியது. என்னிலிருந்து 200மீற்றர் தூரத்தில் அந்த உணவகத்தை மொய்த்திருந்தவர்கள் சிரிப்பும், களிப்புமாய் உணவைச் சுவைத்துக் கொண்டும், ஐஸ்கிறீமை ரசித்துக் கொண்டும், அற்ககோல் நிரம்பிய பானங்களை ருசித்துக் கொண்டும் எத்துணை ஆனந்தமாக இருந்தார்கள். வழமையில் அதனருகில்தானே எனது வாகனத்தை பார்க் பண்ணுவேன். இன்று பார்த்து ஏன் இங்கே?

என்னைப் பார்ப்பார் யாருமில்லை. பார்த்தவர்களும் நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பது அநாகரிகம் என்பது போல பார்த்தும் பார்க்காமல் இருந்தார்கள். உதவி, உதவி என்று நான் கத்தும் போதெல்லாம் காற்று அதை மறுபக்கமாக தன்னோடு அள்ளிச் சென்று கொண்டிருந்தது. கொஞ்சநஞ்சமாக மிஞ்சிய என் ஒலியும் அவர்களின் சிரிப்புக்குள் கரைந்து கொண்டிருந்தது.

யாராவது என்னைத் தாண்ட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் மனம் தவித்த போது என்னை நோக்கி ஒரு மோட்டார் வாகனம். அதில் ஒரு இளம்சோடி. அந்த வலியிலும் மனம் நம்பிக்கையில் மகிழ்ந்தது.

கஸ்ரப்பட்டு எனது இடது கையை கையை உயர்த்தி அவர்களை சைகையால் அழைத்து எனது வலது கையைச் சுட்டிக் காட்டினேன். வாய் உதவி உதவி என்று ஒலி எழுப்பியது. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு எனக்குக் கையைக் காட்டி மகிழ்ச்சி தெரிவித்தவாறு என்னைக் கடந்தார்கள்.

இப்போது சட்டென்று அறுந்து விழுந்த நம்பிக்கையில் வலியோடு பயமும் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு கணமும் யுகமாய் என்னை வதைத்துக் கொண்டிருந்தன.

எப்படி அது நடந்தது என்று தெரியவில்லை. டிக்கியைத் திறந்து சில பொருட்களை வைத்துச் டிக்கிக்கதவை அடித்துச் சாத்தியவாறே காரின் இடதுபக்கம் விரைந்த போதுதான் அது நடந்தது. கைவிரலை நெரித்து விட்டேன் என்று மட்டும் முதலில் உணர முடிந்தது. ஆனால் விரல் எடுக்க முடியாதபடி சிக்கி விட்டது என்பது பின்புதான் தெரிந்தது. லொக் விழுந்து விட்டதால் சும்மா கதைவைத் திறக்க முடியவில்லை. வலதுகைப் பெருவிரல் மாட்டியிருப்பதால் இடதுகையை வலது பக்கத்துக்கு நீட்டி சுவிச்சை அழுத்தவும் முடியவில்லை. எனது ஒவ்வொரு சிறு அசைவும் என் உயிரையே வதம் செய்தன. யாராவது வந்து திறந்து விடாமல் நான் அசையவே முடியாது.

எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை நோக்கி யாரும் வருவதாக இல்லை. அவர்களில் அனேகமானோர் தமது மாலைப் பொழுதை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உணவகங்களிலும், மதுபானச் சாலைகளிலும், கோப்பிக்கடைகளிலும் இனிதே கழித்துக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் ஒரு இளம்சோடி. தேவாலயப்பக்கத்திலிருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். என்னிலிருந்து குறைந்தது 100மீற்றர் தூரமாவது இருக்கும். அவர்கள் என் பக்கம் திரும்பாமலே உணவகப் பக்கமாகப் போய் விடலாம். நான் அவசரமாக இடது கையை உயர்த்தி அசைத்தேன். அவர்கள் என்னைக் கண்டு விட்டார்கள். ஆனால் மகிழ்வோடு கையை அசைத்து விட்டு திரும்பி உணவகம் நோக்கி நடக்க எத்தனித்தார்கள்.

நான் மிகுந்த பிரயத்தனப்பட்டு எனது குரலை உயர்த்தி எனக்கு உங்கள் உதவி தேவை என்றேன். அதிர்ஸ்டம் அந்தளவேனும் இருந்திருக்க வேண்டும். என் வேண்டுதல் அவர்களது செவிகளைச் சென்றடைந்து விட்டது. ஆச்சரியமும், கேள்வியும் முகங்களில் தொக்கி நிற்க என்னை நோக்கி வந்தார்கள்.

என் நிலைமையை சைகோயோடு விளக்கினேன். புரிந்ததும் அந்த ஆண் அவசரமாக கதவை அழுத்தித் திறந்து விட்டான். வலது கையின் பெருவிரல் சப்பளிந்து போய் இருந்தது. தாளமுடியாத வலியில் கைகளை உதறினேன். பெருவிரல் வெடித்திருந்ததில் குருதி சிதறியது.

அந்தப் பெண் ஏதாவது வகையில் எனக்கு உதவ எத்தனித்தாள். „இந்தியர்களா நீங்கள்?“ எனக் கேட்டேன். „ஓம்“ என்றார்கள். பெயரையோ, வேறு விபரங்களையோ கேட்கும் நிலையில் அப்போது நான் இருக்கவில்லை.

பிறகென்ன மருத்துவமனை, அவசரப்பிரிவு, காத்திருப்பு... என்று நேற்றைய பொழுது (29.06.2015) நடுஇரவு 12 மணிவரை அங்கேயே போய்விட்டது.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பெருவிரல் எலும்பு அந்த இடத்தில் நசிந்தும், சிதைந்தும் போயிருக்கிறது என்றார் மருத்துவர். இப்போது எல்லாம் ஸ்தம்பிதம். பத்துப் போட்ட வலது கையுடன் நான்.

சந்திரவதனா
30.6.2015