Saturday, October 08, 2016
எழுதித்தீராப் பக்கங்கள்
யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளிவந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ, விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும், வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது, தலையைப் பிய்த்துக் கொள்வேன். நிலத்திலே ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.
இப்போது என்னிடம் ஓரளவு புத்தகங்கள் கைவசம் உள்ளன. நூற்றுக்கணக்கான மின்னூல்களைத் தரவிறக்கி வைத்திருக்கிறேன். போதாததற்கு நல்ல வாசக நண்பர்கள் பல படைப்புகளை இணைப்புகள் தந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவைகளுள் புத்தகமாக உள்ள எதை வாசிக்கலாம் என்று யோசித்த பொழுது மைக்கேல் எழுதிய
/////செல்வண்ணருக்குள் இப்படியொரு கதைசொல்லி இருப்பதை நான் நினைத்துப் பார்த்தயேயில்லை. எழுது, எழுதடா என்று என்னை ஊக்கமளித்த மனுஷனிடம் உள்ளடங்கியொரு, எழுதுமேசை(தை) இருப்பதை நான் அறியவேயில்லை..! /////
என்ற வாக்கியமும், குறிப்பிட்ட அந்தப் பதிவும் ஞாபகத்தில் வந்தன.
கூடவே உமையாழ் பெரிந்தேவி எழுதிய அற்புதமும்.
எழுதித் தீராப் பக்கங்களைக் கையிலெடுத்துக் கொண்டேன்.
எழுதித்தீராப் பக்கங்கள் செல்வம் அருளானந்தத்தின் நினைவுக் குறிப்புகளுடன் மார்ச் 2016 இல் நூலுருப் பெற்றுள்ளது. இதில் உள்ள நினைவுகள் அவர் தாய்வீடு சஞ்சிகைக்காக ஏற்கெனவே தொடராக எழுதியவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை போல 26 உள்ளன. பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்து வாழும் காலத்தின் பதிவுகள், எங்கள் பலரது புலம்பெயர் வாழ்வின் படிமங்களாக விரிகின்றன. எள்ளலும், நொள்ளலுமாய் அதை அவர் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களை கோர்த்து விடுகிறார்.
முதல்கதையை வாசித்து விட்டு நிறுத்தி, பின்னர் தொடரலாம் என நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன்.. ஆனால் அருள்நாதர் வானத்தைக் காட்டி 'கொண்டலிலை மழை கறுக்குது' என்றார், என்ற வாக்கியம் என்னை நிறுத்த விடவில்லை. இரண்டாவது விஜேந்தம்மான் - வீடு வேய்வது பற்றியது. எங்களூர் விடயம். சுவாரஸ்யத்தையும், இப்படியான முறைகளும் உள்ளதா என்ற வியப்பையும் தந்தன. அடுத்து தட்சூண். தட்சூணின் மொழிபெயர்ப்பு, நான் ஜெர்மனிக்கு வந்த போது எனது கணவரின் நண்பர்கள் - அவர்கள் ஒன்றரை-இரண்டு வருடப் *பழையகாய்கள் - ஜெர்மனியமொழி தெரிந்தவர்கள் போல சவடால் விட்டதைத்தான் ஞாபகப் படுத்தியது. தட்சூணின்இழப்போ இன்னும் பல துயர்களை ஞாபகப் படுத்தியது.
அதற்கு மேல் வாசிக்க முடியாமல் சில அத்தியாவசிய வேலைகள்.
அப்போது மனம் வேண்டியது: எந்த அவசரங்களும் இல்லாது இப்படியே இருந்து ஆசை தீர வாசித்துத் தீர்த்துவிட பொழுதுகள் வசப்பட வேண்டும்.
(*பழையகாய்கள், கார்ட்காய்கள்... போன்றவை, ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோர் உருவாக்கிய பதங்கள். இச்சொற்களுக்கென ஒரு தனி அகராதியே தயாரிக்கலாம்)
சந்திரவதனா
08.10.2016