Thursday, October 13, 2016

பொதி கொண்டு வருபவன்

கடந்த வெள்ளியன்றும் வழமையான வெள்ளிக்கிழமைகளில் போலவே எனது மகன் துமிலன் மதிய உணவுக்கு என்னிடம் வந்திருந்தான். கிழமையில் ஒரு நாளாவது கண்டிப்பாக என்னைச் சந்திக்க வேண்டுமென்பதற்காக அவனாகவே விருப்போடு ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடு அது.

அவன் வந்து கொஞ்ச நேரத்தில் அழைப்புமணி அழைத்தது. அந்த நேரம் நான் உள்ளியும், வதக்கிய வெங்காயமும், பொரித்த கத்தரிக்காயும்… என்று பல்வித நறுமணங்கள் கமகமக்க நின்றேன். அதனால் மகனிடம் „என்னெண்டு ஒருக்கால் போய்ப் பார். அனேகமாக பார்சலாக இருக்கும். எனக்கொரு பார்சல் வரவேண்டும்“ என்றேன்.


படிகளில் இறங்கிக் கீழே போனவன் மேலே வரவில்லை. ஏதோ சர்ச்சைப் படுபவர்கள் போல வந்தவனும், எனது மகனும் கதைக்கும் சத்தம் கேட்டது. வெளியில் போய் மேலிருந்தே படிகளுக்கும், விறாந்தைக்கும் இடையில் இருந்த இடுக்குகளினூடு பார்த்தேன். பொதி கொண்டு வருபவன்தான் மேலே நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். சொற்கள் தெளிவாக என் காதுகளில் விழவில்லை. வெளிச்சத்தங்கள் அதிகமாயிருந்தன.

பெரும்பாலான சமயங்களில் பொதி கொண்டு வருபவர்கள் என் மகனை அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இப்போது சில வாரங்களாக வருபவன் புதியவன். இளையவன். என் பிள்ளைகளின் வயதை ஒத்தவன்.


ஒருவேளை இவனும் என் மகனை அறிந்தவனோ அல்லது இருவரும் நண்பர்களோ என நான் எனக்குள் யோசித்துக் கொண்டேன்.


ஒருவாறு மகன் மேலே வந்ததும்
„என்ன பிரச்சனை?“ என்றேன்.
„நீங்கள்தான் பிரச்சனை“ என்றான்
„நானா? என்ன பிரச்சனை?“
„வழக்கமாக ஒரு பெண் வந்து பார்சலை வேண்டுவாளே! அவளுக்கு நீ யார் கணவனா?“ என்று கேட்டான். நான் „இல்லை மகன்“ என்றேன். „இருக்காது, அவள் உன்ரை மனைவியாக இருக்கலாம். இல்லாவிட்டால் சகோதரியாக இருக்கலாம். அம்மா..! அதை நான் நம்பமாட்டேன்“ என்று கொண்டு நின்றான்“ என்றான்.


அன்று மாலையே இதையொத்த இன்னொரு சம்பவம் நடந்தது. இரவு வீடு வந்ததும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். நிட்சயமாக 34வயதுள்ளவள் போல இளமையாக நானில்லை. முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது. எனது மகனுக்கு இப்போதுதான் 34. எனக்கு மார்கழியில் 57 ஆகிறது.


சந்திரவதனா
13.10.2016

எனது மகனுக்கு நானே ஏடு தொடக்கினேன்

இன்று ஏடுதொடக்கல் பற்றிய பல பதிவுகளைப் பார்க்கும் போது நான் எனது கடைசி மகன் துமிலனுக்கு நானே ஏடு தொடக்கிய நாள் ஞாபகத்தில் வந்தது. கூடவே இந்தப் பதிவும் ஞாபகம் வந்தது. 

எனக்கு எட்டிய எட்டுக்கள்

ஊரில், சோறு தீத்துவதும், ஏடு தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு ´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன்.
 
அதனால் ஒரு குறையும் வரவில்லை. இன்று அவன் ஒரு எழுத்தாளர், நிருபர், பத்திரிகை ஆசிரியர்.

சந்திரவதனா
11.10.2016