"என்ரை தலேணியை ஆர் எடுத்தது? அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது."
தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.
தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.
"அம்மா...! தலேணி...! "
பரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.
"டேய்..! என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்?"
கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.
"அக்கா என்றால் அக்காதான்."
முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.
"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..!"
டக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது.
"என்னடா.. நீ..........! பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. "என்ற படி
அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.
"ஏமாந்துட்டா...! ஏமாந்துட்டா...!" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.
"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு."
என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.
திடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ்சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன.
இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ.! நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.
மீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ..!
எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ..! அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.
பலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை.
பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு து}ரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக
"பரதன்..! நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..?"
என்று கேட்டோம்.
உடனே அவன் தடுமாறி "இல்லை...இல்லை... ஆர் சொன்னது..?" என்றான்.
பின்னர் ஒரு நாள் "அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ." என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.
எங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.
(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)
No comments:
Post a Comment