வேலை நேரம் ஏதோ அலுவலாக வெளியில் வந்த போது அவன் பணம் எடுக்க என்று வந்திருந்தான். கார்ட்டைப் போட்டு இரகசிய இலக்கங்களை அழுத்தி விட்டுத் திரும்பிக் குழந்தைத் தனமாய் சிரித்தான். சந்தோசமாக இருந்தது. தமிழன்.
சில நாட்களுக்கு முன் அவனை பேருந்தினுள் சந்தித்த ஞாபகம். அன்று அவன் வேலை முடிந்து சென்று கொண்டிருந்ததால் தலை கலைந்து உடைகள் கசங்கி
களைப்பாகத் தெரிந்தான். இன்று குளித்து... குளிர்ச்சியாகத் தெரிந்தான். எமது நகரத்துக்குப் புதியவன்.
சின்னதான குசல விசாரிப்பின் பின் சற்று ஆழமாக அவன் பற்றி விசாரித்தேன்.
குழந்தைத் தனமாகச் சிரிக்கும் அவனுக்கு விரைவில் குழந்தை கிடைக்கப் போகிறதாம். ஆனாலும் விழியில் மெலிதான சோகம். பதினாறு வயதிலேயே யேர்மனிக்கு வந்து விட்டானாம். படித்திருக்கலாம். அம்மா அப்பாவுடன் வரவில்லை. அதனால் படிப்பை விட அம்மா அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய பணம் முக்கியமாகத் தெரிய வேலை செய்யத் தொடங்கி விட்டான். இப்போது 23 வயதில் இயந்திரங்கள் நடுவே இயந்திரமாகி விட்டான்.
விசாவுக்காக.. பேசிக் கதைத்து யேர்மனியில் வதிவிட அனுமதி கிடைத்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளான். மனசை விட விசாதான் இந்தத் திருமணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதனால் மனைவியும் அருகில் இல்லை. வேறு நகரிலாம்...
அவன் போய் வெகு நேரமாகி விட்டது.
இவனின் வாழ்வு ஏன் இவ்வழி திரும்பியது? மனசு கேட்கிறது.
சந்திரவதனா - யேர்மனி - 22.9.2003
No comments:
Post a Comment