Thursday, April 22, 2004

எம்மை விட்டுப் போயின


தோழியர் பகுதியில் சுரதா தனது இனிய நினைவுகளைக் கிளற தான் பரணைக் கிளறியதாக உஷா எழுதி என்னையும் கிளறியிருக்கிறார். உண்மையிலேயே கட்டிய கதைப்புத்தகங்களைப் பற்றிக் கதைக்கும் போது மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் புகுந்து கொள்ளும். நான் யேர்மனிக்கு வந்த போது தமிழில் வாசிப்பதற்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் எனது வீட்டில் குவிந்திருந்த புத்தகங்களையே நினைத்துக் கொள்வேன். சிலதையாவது கொண்டு வந்திருக்கலாமே என மனதுக்குள் ஆதங்கப் படுவேன். ஆனாலும் எல்லாம் வீட்டில் பத்திரமாக இருக்கிறதுதானே..! ஒரு காலத்தில் போய் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொள்வேன்.

ஆனால்...
1987 இலிருந்து 1989 வரை எனது தம்பியைத் தேடி வந்த இந்திய இராணுவத்தினர் வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு போகத் தொடங்கி விட்டனராம். தளபாடங்களை அவ்வப்போது வாகனங்களுடன் வந்து ஏற்றிச் சென்றார்களாம். கதைப்புத்தகங்களையும் புகைப் படங்களையும் கொண்டு போகவில்லையாம். தூக்கித் தூக்கி எறிந்தார்களாம். நினைத்தால் வயிறெரியும் எனக்கு.

குமுதம், கல்கி........ என்று எல்லாப் புத்தகக் கதைகளையும் கிளித்தெடுத்துச் சேர்த்து வட்டாரியால் ஓட்டை போட்டு தொசன் நூலை பெரிய ஊசியில் கோர்த்து புத்தகங்களாகக் கட்டிக் கட்டி வைப்பா அம்மா. பொன்னியின் செல்வன்.. போன்ற புத்தகங்களை பெரிய பெரிய புத்தகமாகவே வாங்கி வைத்திருப்பா. எனது கணவர் சுஜாதாவின் புத்தகங்களில் ஒன்றையும் தவற விடாமல் வாங்கி விடுவார். இப்படியே அப்பா ஒரு பாடு. அண்ணன் ஒரு பாடு என்று எத்தனை புத்தகங்கள். அத்தனையும் ஒன்று விடாமல் எம்மை விட்டுப் போய் விட்டன.

உஷா குறிப்பிட்ட உடல் பொருள் ஆனந்தியும் எங்கள் வீட்டில் இருந்தது.
அக்கதையை எத்தனை வயதில் வாசித்தேன் என்பது ஞாபகம் இல்லை.
ஆனால் கதையில் வரும் திலீபனின் உடலுக்குள் இன்னொருவரின் ஆவியோ உயிரோ ஏதோ ஒன்று செலுத்தப்பட்டு.......... ஒரு வித்தியாசமான கதை.

No comments:

Post a Comment