Sunday, May 23, 2004

பயம்

- தொடர்ச்சி -

அது 1984ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ந் திகதி.(1.9.1984)

அப்போது எனது கணவர் தவிர்ந்த மற்றைய எல்லாப் பிள்ளைகளும் வெளிநாடு சென்று விட, மாமி தனியேதான் இருந்தா. அதனால் நாங்களும் எங்களது ஆத்தியடி(புலோலி மேற்கு) வீட்டை விடுத்து மாமிக்குத் துணையாக மாமியுடன் காக்கியவளவு(புலோலி கிழக்கு) வீட்டில் தங்கியிருந்தோம்.

அன்று வழக்கம் போல் நானும் எனது கணவரும் எங்களது மூன்று குழந்தைகளும் எங்களுக்கான அறையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். எங்களது வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

இந்த அர்த்தஜாமத்தில் மாங்காய்ப்பூட்டுப் போட்டு பூட்டப் பட்டிருக்கும் கேற்றைத் தாண்டி வந்து உள் வீட்டுக் கதவைத் தட்டக் கூடியவர்கள் வேறு யாராக இருக்க முடியும். இலங்கை இராணுவத்தினர்தான். கணப்பொழுதில் கோர்வையாக்கப் பட்ட எண்ண ஓட்டத்தில் திடமாக முடிவெடுத்துக் கொண்டேன். பயத்தில் நெஞ்சு படபடத்தது.

அது இலங்கை இராணுவத்தினர் வீடுவீடாகப் புகுந்து ஆண்களை இழுத்துச் செல்லும் காலம். எமது ஆத்தியடி வீட்டை விட இந்த வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற சின்னதான நம்பிக்கையும் தளர்ந்து போக எனக்கு உடம்பு வெடவெடத்தது.

பேய் பிசாசு என்று எதுவுமே இல்லை என்று எனக்குள்ளே நான் ஒரு தீர்வுக்கு வந்திருந்தாலும் மாமி வீட்டின் பின் வளவுக்குள் அசுரத்தனமாய் குடை விரித்திருக்கும் புளியமரங்களின் அசைவுகள் இரவின் இருட்டில் என்னை மருட்டும். அதனால் முடிந்தவரை இரவு 9மணிக்கு மேல் அந்தப் பக்கம் போகவே மாட்டேன். இப்போது இராணுவ வடிவில் மனிதப் பேய்கள் என் வீட்டு வாசலில்...
எனது கணவரை - பின் கதவால் - அந்தப் புளியமரங்களினூடே இழுத்துக் கொண்டு எங்காவது ஓடி விட நான் தயார்.

கதவு மீண்டும் தட்டப் பட்டது. எனது கணவரில் கூட ஒரு தடுமாற்றம். ஆனாலும் கதவைத் திறக்க முன்னேறினார். நான் அவசரமாய் அவரை மறித்து திறக்க விடாது தடுத்தேன். அறையின் பின் கதவைச் சுட்டிக் காட்டி அந்த வழியால் ஓடும் படி சைகை காட்டினேன். வாய் திறந்து பேசவோ பலத்து மூச்சு விடவோ முடியாத பயம். பின் கதவைத் திறந்தால் அது Binding அறை. அதைத் திறந்தால் நாற்சார முற்றம். அதனூடு பின் கதவு வழியாக ஓடினால் புளியம்மரங்களைத் தாண்டி.. அடுத்த காணிக்குள் குதித்து ஓடலாம். ஆனாலும் எனது கணவர் ஒரு வித தடுமாற்றத்துடன் முன் கதவைத் திறக்க முனைந்தார்.

இப்போ என்ன நடக்கப் போகிறது? எனக்கு நடுங்கியது. எல்லா வீடுகளிலும் போல் எனது கணவர் எனக்கு முன்னாலேயே சுடப் படுவாரா..?
அல்லது இழுத்துச் செல்லப் பட்டு எங்காவது நிறுத்தி வைக்கப் பட்டு மற்றவர்களுடன் வரிசையில் நிறுத்திச் சுடப் படுவாரா..? அல்லது பிடித்துக் கொண்டு போய் திரும்பி வராதவர்கள் பட்டியலில் சேர்க்கப் படுவாரா..? நெஞ்சு திக் திக் கென்று கொண்டே இருந்தது. பயம் நெஞ்சை அடைக்கப் பின் தொடர்ந்தேன். ஆனால் வெளியிலே இராணுவம் இல்லை. எனது தம்பிதான் வெளிறிய முகத்துடன் நின்றான்.

போன உயிர் திரும்ப வந்தது போன்ற ஒரு பெரு நிம்மதி. ஆனாலும் ஏன் இந்த நேரம் வந்தான் என்ற கேள்வி மனதுள் அவசரமாய் எழுந்தது. அவன் சத்தமாகக் கதைக்கத் திராணியற்றவனாய் எனது கணவரை வெளியில் அழைத்துச் சென்று மேலே காட்டினான். ரவுண் பக்கமாக வான் நோக்கிய தீச்சுவாலையும் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு கரிய புகையும்................

தம்பியின் கிசுகிசுப்பில் எல்லாம் விளங்கி விட்டது. இராணுவம் தன் கைவரிசையைக் காட்டி விட்டது. New Market எரிகிறது. கூடவே எனது கணவரின் புத்தகக்கடையும்.

சில லட்சங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் வானளாவிய தீச்சுவாலையை அந்த அர்த்தஜாமத்தில் புளியமரங்களுக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டு நின்றேன். புளியம்மரங்களின் அசைவுகள் எனக்கு எந்தப் பயத்தையும் தரவில்லை.

22.5.2004

No comments:

Post a Comment