Thursday, October 28, 2004

நலந்தானா...? நலந்தானா...? உடலும் உள்ளமும் நலந்தானா...?


இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.

என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.

வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.

அந்த வகையில் தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.

இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.

பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...

என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.

மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.

சந்திரவதனா
யேர்மனி

2 comments:

  1. Of course I like this song, However I like the other song in that film very much..
    Marainththirunthu parkkum Marmam Enna?

    You may not know the history of the film. It was a story by "Somu" called thllana mohanaambaal. The hero of the story was named as Shanmugam from a vilage called Siccal. As Kannathaasan read that story he wrote that song.

    If you just hear the song its just a devotional song of God Murugan. The dancer is just asking the god "why you don't come in front of me physicaly?" But it fits with the film very nicely.
    Murali | Email | 11.14.04 - 12:06 am | #
    Balamuralii@gmail.com

    ReplyDelete
  2. வணக்கம் முரளி

    உங்கள் கருத்தை தற்பேது இரு தினங்களுக்கு முன்தான் பார்த்தேன்.
    எனது தளத்துக்கு வந்ததற்கும் கருத்தைத் தந்தற்கும் மிகவும் நன்றி.

    நீங்கள் குறிப்பிட்ட மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாட்டும்
    எனக்குப் பிடித்ததே.

    நட்புடன்
    சந்திவதனா
    chandravathanaa | Email | Homepage | 12.02.04 - 8:16 am | #

    ReplyDelete