Wednesday, November 03, 2004

தீயணைப்புப் பயிற்சி

ஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது.
நான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.

இங்குள்ள பாடசாலைகளில் அடிக்கடி இந்தத் தீயணைப்புப் பயிற்சி நடக்கும்.
பிள்ளைகள் எப்படி ஓடி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது
மிகுந்த கவனமான முறையில் சொல்லிக் கொடுக்கப் படும்.

அதை விட டிஸ்கோ, தியேட்டர்... போன்ற பலர் நடமாடும் இடங்களிலும் இப்பயிற்சி அடிக்கடி நடக்கும். டிஸ்கோ நிலையத்தின் பாதுகாப்புத்தன்மை, அதாவது தீ என்று வரும் போது மக்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவா என ஆராயப் படும். அவசரகால வெளிச் செல் பாதைகள் உண்மையிலேயே, ஆபத்தான நேரங்களில் கும்பலாக ஓடும் மக்கள், வெளிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சரியாக அமைக்கப் பட்டுள்ளனவா என அடிக்கடி ஆராயப் படும்.

கடந்த வருடம் ஒரு டிஸ்கோ நிலையத்தில் அவசரகால வெளிச் செல் பாதையின் கதவு ஒன்று டிஸ்கோ நேரம் திறக்கப் படாமல் இருந்ததற்காக அந்த நிலையம் கோர்ட் வரை செல்ல வேண்டியிருந்தது.

கடந்த வருடம் அல்லது இவ்வருட ஆரம்பம் என நினைக்கிறேன். ஸ்பெயினில் ஒரு டிஸ்கோ தீப்பற்றி எரிந்ததில் பலர் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். அதன் பின்னான ஆராய்சியில் அங்கு சரியான அவசரகால வெளிச்செல் பாதைகள் அமைக்கப் படவில்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இப்படியான அநாராப்பான சம்பவங்கள் யேர்மனியில் மிகமிகக் குறைவு.
சட்டம், ஒழுங்கு, கல்வி... போன்றதான விடயங்களில் யேர்மனி மிகக் கவனமாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment