1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம்! இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. "ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்" என்ற ஆதங்கம் தோன்றியது.
அவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.
"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா?" என்று கேட்டேன்.
அவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது
"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்" என்றாள்.
இது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா? இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.
பின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொண்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.
இன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...?
உஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை? என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.
அதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.
இது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.
எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.
உஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை? இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா? என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)
மற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.
ஏன் எழுதக் கூடாது? என்பது எனது கேள்வியாகிறது.
அங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.
நான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்
உஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்.
//உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.//
ReplyDeleteஅய்யோ.. இப்பிடியா கேட்டாங்க?!
தாராளமாக, நிறைய எழுதுங்க தோழியரே! ஆனால், கொஞ்சம் சீரியஸா இருக்குறதுதான் என்னை மாதிரி 'சிறுபுள்ளை'ங்களுக்கு கஷ்டமா கீது!
எனக்கென்னவோ நீங்கள் பொட்டு மற்றும் மெட்டி பற்றிச் சொல்வது கூட பசப்புவதாகவே தெரிகிறது. மருத்துவ நன்மைகளென்பது நமது ஆட்கள் விடும் புருடா என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து. மயிர் நீளமாக வளர்ப்பது கூட மருத்துவக் காரணங்களால் தான் என்று ஏய்க்கவும் பலர் இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் சம்பந்தப்பட்ட பெண்தான் தீர்மானிக்க வேண்டுமென்பதில் எனக்கு எள்ளளவும் ஆட்சேபனையில்லை. ஆனால் இது சம்பந்தமான அரோக்கியமான விவாதங்கள் நிச்சயமாய் நடைபெற வேண்டும்.
ReplyDeleteவசந்தன், மெட்டி என்பது இருபாலரும் அணியும் அணி. அதாவது ஆணுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளமாய் அணியப்பட்டு
ReplyDeleteவந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும்.
குங்குமம் பற்றி ராகுலசாங்கிருதயானின் வால்காவில் இருந்து கங்கைவரை என்ற புத்தகத்திலும், ராஜம்கிருஷ்ணன் எழுதிய
"மங்கையராக பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்" என்ற புத்தகத்திலும் ஆதி மனிதன் கல்லால் நெற்றியில் காயம், சிவப்பு
ரத்ததில் தன்னுடைய பெண்ணை மார்க்- குறி வைத்து விடுவானாம். அது பின்பு சிவப்பு குங்குமமாய் மாறி இன்று ஸ்டிக்கர் பொட்டாய்
பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
தாலி என்பது தென் இந்தியாவில் மட்டும்தான். வடக்கில் நெற்றி வகுட்டில் குங்குமம். இந்த அடையாளங்களின் மூல காரணம் துருக்கிய
படையெடுப்பில், மாற்றான் மனைவியைத் தொட மாட்டார்களாம். பெண் வயதுக்கு வருவதற்கு முன்பான கல்யாணமும் இதற்குதான்.
usha
கருத்துக்கு நன்றி. தாலி என்பது கூட இருபாலாருக்கும் பொதுவானதாகவே இருந்துள்ளது. ஆண்களுக்குரிய அணிகலனாக விளங்கியதற்கு நமது சங்க இலக்கியத்திலேயே ஆதாரங்கள் இருப்பதாக உணர்கிறேன். (நான் சொல்வது இன்றைய அர்த்தத்திலுள்ள திருமணத் தாலியை அன்று – தாலி என்ற சொல்லை – எ-டு: ஐம்படைத்தாலி) சரி, மெட்டி, பொட்டு, தோடு மற்றும் தாலி பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? ஆண்களும் அணிந்தார்கள் என்ற வாதத்தை விட்டுவிட்டுச் சொல்லவும். ஏனெனில் இவை இன்றைய தமிழ்ச் சூழலில் பெண்களுக்கென்றே வரையறுக்கப் பட்டுவிட்ட நிலையிற் கேட்கிறேன். மேற்கூறியவை எவையும் பெண்ணுரிமையோடு சம்பந்தப்படவில்லையா? அல்லது எந்தளவிற் சம்பந்தப்படுகிறது? அனுகூலமாகவா, அடக்குமுறையாகவா? இவை எவையும் பெண் மீதான அழுத்தங்களாக நீங்கள் உணரவில்லையா? எவ்விதக் கேள்வியுமின்றி பெண்கள் இவற்றை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறார்களா?
ReplyDeleteஇதில் என் கருத்தென்று ஏதுமில்லை. உங்களின் கருத்துக்களையே எதிர்பார்க்கிறேன். உங்கள் இருவரிடமிருந்துமே.
ரஜனிராம்கி, உஷா, வசந்தன், மணிமாறன்
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
கொஞ்சம் busyயாக இருப்பதால் உடனடியாகப் பதில் தர முடியவில்லை.
ஒரு வாரத்தில் எனது பதில் கருத்தைத் தருகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா
சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு. இது என்ன போங்கு? அப்போது டயானா நல்லவரா என்று மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? இது ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க மனபாவம்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
Sorry. I was unable to give this comment in your posting for Diana. I am told that the post-id cannot be found.
As for purdah, I agree with your views.
நன்றி சந்திரா மேடம் ( மேடம் கட்டாயம் உண்டு). நம் எழுத்து எல்லாம் நம் உள்மனம் கேட்கும் கேள்விகளின் எண்ணங்களின்
ReplyDeleteவெளிப்பாடு. எதுவும் சரியென்றோ, தவறு என்றோ கிடையாது என்பது என் எண்ணம். யாரையும் புண்படுத்தவோ, கேலி செய்யவோ
என் நேரத்தை நான் செலவழிக்கவில்லை. தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள். தவறு என்பது தவறி செய்வது. உங்கள் ஆதரவான
வார்த்தைகளுக்கு மன பூர்வமான நன்றி!
உஷா
பி.கு ரஜ
usha | Email | 12.22.04 - 1:30 pm | #