புதிது புதிதாகப் பூக்கும் வலைப்பூக்களில் என்னைக் கவர்ந்தவைகளில் ஷ்ரேயாவினது பதிவும் ஒன்று. சின்னச் சின்னதாய்... விடயம் கலந்த சுவைகள்.
இவர் பற்றி ஈழநாதனும் குறிப்பிட்டுள்ளார். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ஈழநாதன் சற்று வித்தியாசமான சிந்தனையோடு ஈழப்பூக்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.
துகள்கள் சத்யராஜ்குமாரின் அடுத்த அங்கம் அதாவது என்னை எழுதியவர்களின் ஆறாவது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்துள்ளது. கூடவே துகள்களிலும் ஒரு புதிய கதையைப் பதிந்துள்ளார். பிழைப்பு - இன்னும் வாசிக்கவில்லை. நிட்சயம் நல்லாக இருக்கும் என்ற நம்பிக்கை.
சுரேன் ஊர் சுற்றுகிறார். பொறாமையாக இருக்கிறது. ஆனாலும் ஓடி வந்து சின்னதாகப் பதிந்து விட்டுப் போயுள்ளார்.
திசைகள் ஆனி மாத இதழ் கணினி சங்கடப் படுத்தியதால் மிகவும் தாமதமாகி எங்களைச் சங்கடப் படுத்தியது. இம் மாத இதழும் 6ந்திகதியாகியும் இன்னும் வரவில்லை. மாலனுக்கு என்ன பிரச்சனையோ? நேர்த்தியான இணைய இதழ்களில் திசைகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்று.
பாலா அழகிய புகைப்படங்களைப் பதிக்கிறார். இன்றைய பதிவு தொட்டாச்சிணுங்கி. எத்தனை காலத்துக்குப் பிறகு பார்க்க முடிந்தது. சின்ன வயசு ஞாபகங்களைக் கிளறி விடும் படம்.
ஜெயந்தி வலைப்பு ஆசிரியராக இருந்த போது வலைப்பதிவகளுக்குப் புள்ளிகள் போட்டார்.
அதைத் தொடர்ந்து இன்னொரு பதிவாளர் தனது பதிவில் அது பற்றி எழுதி 30 வலைப்பதிவுகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, ஒரு சில குறிப்பிட்ட வரைவிலங்கணங்களோடு அவைகளுக்குப் புள்ளியிடச் சொல்லியிருந்தார். புள்ளி போடும் வேலை எனக்குச் சரி வருமோ என்று தெரியவில்லை. ஆனாலும் அதை மீண்டும் ஒரு முறை வாசிக்கலாமென்ற எண்ணத்தில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை.